நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவை பறிகொடுத்த தமிழக மாணவர்கள்... கதறலை பகிரும் ஃபேஸ்புக் பக்கம்
நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவை பறிகொடுத்த மாணவர்களுக்காக ஃபேஸ்புக்கில் தனி பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை: நீட் எனும் தகுதித் தேர்வால் மருத்துவ படிப்பு கனவை பறிகொடுத்த தமிழக மாணவர்களின் கதறலை பகிரும் ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் அண்மையில் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அனிதா என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவி 196.5 கட் ஆப் மதிப்பெண்கள் வைத்திருக்கிறார். ஆனால் நீட் தேர்வில் 85 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவ படிப்பு கனவை தொலைத்திருக்கிறார் என நெஞ்சை கனக்க வைக்கும் ஒரு பதிவை போட்டிருந்தார்.
அனிதா, அருள் கார்த்திக்
அனிதாவைப் போல அருள் கார்த்திக் எனும் மாணவரும் தம்முடைய கதறலை சிவசங்கரிடம் பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து "நீட் தேர்வால், எம்பிபிஎஸ் வாய்ப்பை இழந்தோர்" என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் ஒரு தனிப்பக்கம் தொடரப்பட்டுள்ளது.
தனி ஃபேஸ்புக் பக்கம்
இதில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பதிவு செய்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் நல்ல கட் ஆப் மதிப்பெண்கள் வைத்துள்ளனர்.
குமுறல்
ஆனால் நீட் எனும் தகுதித் தேர்வால் மருத்துவ படிப்பை பறிகொடுத்து நிற்கின்றனர். வறுமையை சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடி படித்து மதிப்பெண்கள் பெற்றும் பாழாய் போன நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவை தொலைத்துவிட்டோம் என இந்த பக்கத்தில் குமுறல் வெளிப்படுகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பு
இந்த மாணவர்கள் சென்னையில் நாளை செய்தியாளர்களை சந்தித்து பேசவும் உள்ளனர். தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.