ஆசிரியர்கள் கண்டித்ததால் ஓடிய 7 நெல்லை பள்ளி மாணவிகள் கும்பகோணத்தில் மீட்பு
நெல்லை: ஆசியர்கள் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 7 நெல்லை பள்ளி மாணவிகளை கும்பகோணத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் விகேபுரத்தில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பில் ஐஸ்வர்யா, செல்வி, 10ம் வகுப்பில் ஜெயா, 11ம் வகுப்பில் சுமதி, மாலதி, சி, மாலதி, சத்யா ஆகியோர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் சங்கரன்கோவில் அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர்கள்.
கடந்த வாரம் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை முடிந்தது மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் தாமதமாக வந்ததால் ஆசிரியர்கள் அவர்களை வகுப்பில் அனுமதிக்காமல் கண்டித்துள்ளார். இதனால் மாணவிகள் 7 பேரும் வெளியில் சென்று விட்டனர்.
ஆனால், அவர்கள் விடுதிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடு, தெரிந்து இடங்களில் தேடி பார்த்தும் மாணவிகள் கிடைக்கவில்லை.
பின்னர் விகேபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் மாணவிகளின் செல்போன் நம்பரை கேட்டனர். அதன்படி பெற்றோர் செல்போன் எண்ணை எழுதி கொடுத்தனர். அதனை தொடர்பு கொண்டால் யாரும் எடுக்கவில்லை. ஆனால் அவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருப்பதாக டவர் காட்டியது.
அதனைத் தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி கணேசமூர்த்திக்கு விகேபுரம் போலீசார் தகவல் தெரிவித்தனர். மாணவிகளை மீட்க டிஎஸ்பி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவர்கள் இருப்பிடம் தெரியவில்லை. இவர்கள் திருநாகேஸ்வரம் அருகே ஓப்பிலயப்பன் கோவிலில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீசார் 7 மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த தகவலை விகேபுரம் போலீசாருக்கும் தெரியப் படுத்தினர். இன்று மாணவிகள் நெல்லை அழைத்து வரப்படுகின்றனர்.
ஆசிரியர் கண்டித்ததால் மாணவிகள் வேறு ஊருக்குச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.