பச்சையாற்றில் தடுப்புகள் உடைந்து கிராமத்தை தண்ணீர் சூழ்ந்ததால் பதற்றம்
நெல்லை: களக்காடு அருகே பச்சையாற்றில் தடுப்புகள் உடைந்ததால் வெள்ள நீர் கிராமத்தில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அசவர அவசரமாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக 10 அணைகள் நிரம்பி விட்டன. மணிமுத்தாறு அணையும் நிரம்பும் நிலைக்கு வந்து விட்டது. தாமிரபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அணைகளின் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்த மழையால் 50 கன அடி கொள்ளளவுகொண்ட பச்சையாறு அணை முழு கொள்ளளவை எட்டி விட்டது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீரால் களக்காடு, பச்சையாறு, உப்பாறு, நாIங்குநேரியான் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள காலங்களில் உபரி நீர் வந்தால் திடியூரில் உள்ள தடுப்பணைக்கு வருவது வழக்கம். தற்போது பச்சையாற்றில் வெள்ளம்கரைபுரண்டு ஓடுவதால் திடியூருக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மாலை தடுப்பணையில் தண்ணீர் லேசாக கசித்து வெளியேறியதால் தமிழக்குறிச்சி கிராமத்தின் உள்பகுதியில் வெள்ளம் புகுந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக குடியிருப்புகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர்.
இவர்கள் திடியூர் சமூக நலகூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் சாலையில் தண்ணீர் ஓடுவதால் அங்கு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல் நெல்லை சிந்துபூந்துறை படித்துறையை ஓட்டிய பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தாமிரபரணி வெள்ள நீர் புகுந்தது. இதனால் அங்கு பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளனர்.