நெல்லை: போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் பெண்ணிடம் நகை பறிப்பு
நெல்லை: திருநெல்வேலியில் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலிலேயே இளம் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்தவர் சூர்யா. இவர் நெல்லையிலுள்ள ஒரு ஹோட்டலில் அழகு கலை நிபுரணராக வேலை பார்த்து வருகிறார். தனது கணவருடன் அருகில் உள்ள பாலபாக்யா நகர் 15வது வசித்து வருகிறார். இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் வேலையை முடித்து விட்டு நெல்லை சந்திப்பில் உள்ள கடை விதிக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.
நெல்லை உதவி போலீஸ் கமிஷனர் அலுவலக வாசல் முன்பு சென்ற போது திடீரென ஒரு வாலிபர் அவரை வழிமறித்து கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்தார். இதை பார்த்த சூர்யா நகையை பிடித்து கொண்டு கூச்சல் போட்டார். ஆனால் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து போலீசார் யாரும் உதவிக்கு வரவில்லை.
ஆனால் ரோட்டில் நடந்து சென்ற வாலிபர் ஒருவர் நகை பறித்த வாலிபரை துணிச்சலாக சென்று விரட்டி பிடித்தார். ஆனால் நகை பறித்த வாலிபர் அவரை இடித்து கீழே தள்ளி விட்டு அங்கு தயாராக இருந்த வேரறாரு வாலிபரின் பைக்கில் தப்பி சென்றார். இதுகுறித்து சூர்யா நெல்லை சந்திப்பு குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்கள் வழக்கம் போல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நூற்றக்கணக்கானோர் நடமாடும் வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த உதவி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்திலேயே நடந்த இந்த துணிகர சம்பவத்தால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆயினும் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலக வாளகத்தில் பாரா காவலர் பணியில் இருப்பது உண்டு. அந்த சமயத்தில் அவர் எங்கே போனார். அந்த பெண் கூச்சலிட்டும் உதவிக்கு போலீசார் வராதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.