நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா தேரோட்டம்.. ஏராளமானோர் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்
நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனித்தேர் திருவிழா கடந்த 19- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும், கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமி- அம்மாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில் முக்கிய விழாவான ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இரண்டு தேர்களையும் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். முன்னதாக, நெல்லையப்பர் காந்திமதி உருவச் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்துக்குப் பின் தேர்களில் வைக்கப்பட்டது. இந்த தேரானது தற்போது நான்கு ரத வீதிகளில் வலம் வர உள்ளது.
தேரோட்டத்திற்கு எல்லா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருப்பதால், பாதுகாப்பு பணிகளுக்காக 1,200 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகனங்கள் வேறு பாதையில் மாற்றிவிடப்பட்டுள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.