ஆர்.கே.நகரில் எங்க வேட்பாளர் கங்கை அமரன் ஒரு எஸ்சி- நெட்டிசன்களிடம் வாங்கி கட்டும் வானதி சீனிவாசன்
ஆர்கே நகரில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர் கங்கை அமரன் ஒரு எஸ்சி என தெரிவித்து நெட்டிசன்களிடம் வறுபடுகிறார் வானதி சீனிவாசன்.
சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஒரு எஸ்.சி. என டிவி விவாதத்தில் பேசிய வானதி சீனிவாசனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. அதிமுக இரண்டு பிரிவுகளும் கட்டிப் புரண்டு சண்டப் போட்டுக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றன.
பிரசாரம் மும்முரம்
திமுக, மார்க்சிஸ்ட், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் பாஜக வேட்பாளர்களும் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் தொடர்பாக புதிய தலைமுறை டிவியில் விவாதம் நடைபெற்றது.
டிவி விவாதத்தில் வானதி
இதில் பாஜகவின் வானதி சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடைத் தேர்தலில் போட்டியில்லை என்ற விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாட்டை வானதி சீனிவாசன் விமர்சித்துக் கொண்டிருந்தார்.
எங்க வேட்பாளர் எஸ்சி
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளராக நாங்க நிறுத்தியுள்ள கங்கை அமரன் ஒரு எஸ்.சி.தான்...எனக் குறிப்பிட்டு அவரை நீங்க ஆதரிக்கலாமே என்கிற தொனியில் திருமாவளவனிடம் கேள்வி கேட்டார் வானதி சீனிவாசன். இது நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமா பதிலடி
இது தொடர்பாக வானதி சீனிவாசனுக்கு அதே அரங்கத்திலேயே திருமாவளவன் பதிலடியும் கொடுத்தார். கங்கை அமரனை நாங்கள் எஸ்.சி வேட்பாளராக பார்க்கவில்லை; பாஜகவின் வேட்பாளராகத்தான் பார்க்கிறோம் என ஒரே போடு போட்டார்.
வாங்கி கட்டும் வானதி
வானதி சீனிவாசனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாஜகவின் சாக்கடை பேச்சை வானதி வெளிப்படுத்தி நெட்டிசன்களில் நன்றாக வாங்கிக் கட்டி வருகிறார்.