சேலத்தில் 16 பேருக்கு கண்பார்வை பாதிப்பு: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சென்னை: மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது குறித்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் இம்மாதம், 14ம் தேதி, ஏழு பேர், 15ம் தேதி, எட்டு பேர்; 16ம் தேதி, எட்டு பேர் என, மொத்தம், 23 பேருக்கு டாக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்செல்வி, சுபா, நித்யா ஆகியோர் கண் புரை அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து, இரு நாட்களுக்கு பின், நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களது கண்களில் ஊற்றுவதற்காக சொட்டு மருந்து வழங்கினர். இதை ஊற்றிய பின்னரும் யாருக்கும் குணமாகவில்லை. ஆனால், ஐந்து ஆண்கள், 11 பெண்கள் என, மொத்தம், 16 முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த கண்ணில் சீழ் பிடித்து, கண் பார்வை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்து, தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய மனித உரிமை ஆணையம், அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.