தஞ்சை விவசாயி தாக்கப்பட்ட சம்பவம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தஞ்சாவூர்: டிராக்டருக்கு வாங்கிய கடனை கட்டத் தவறிய விவசாயியை போலீசார் அடித்து இழுத்து சென்றது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சை மாவட்டம் சோழகன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலன், இவர் கோட்டக் மகேந்திரா வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியிருக்கிறார். தவணைத் தொகைகட்டாததால் வங்கி, உயர்நீதிமன்றத்தில் வண்டியை கைப்பற்ற உத்தரவு பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 6ம் தேதி, மகேந்திரா ஃபைனான்ஸ் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர், பாலனிடம் இருந்த டிராக்டரை ஜப்தி செய்ய சென்றிருக்கின்றனர். அதற்கு பாலன், இன்னும் 64 ஆயிரம் ரூபாய்தான் கட்ட வேண்டி இருக்கிறது. அறுவடை முடிந்த உடன் அதை நான் கட்டி விடுகிறேன். டிராக்டரை ஜப்தி செய்ய வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.
பாலனின் பேச்சை ஏற்றுக்கொள்ளாத மகேந்திரா ஃபைனான்ஸ் நிர்வாகிகளும், போலீசாரும் பாலனை டிராக்டரில் இருந்து இழுத்து கீழே இழுத்துபோட்டு கடுமையாக தாக்கினர். மேலும், விவசாயி பாலனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு வைத்தும் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். காவல்துறையினரின் இந்த செயலுக்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனம் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினருடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பாதிக்கப்பட்ட விவசாயி பாலன், தன்னை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். அதேபோன்று பறித்து சென்ற டிராக்டரையும் மீட்டு தர வேண்டும் என்றும் பாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாலன், டிராக்டரை பறிமுதல் செய்ய வந்த போலீசாரிடம், நீதிமன்ற ஆணையையை தான் கேட்டதாகவும், நீதிமன்ற ஆணையுடன் வந்து பார்க்க நீ என்ன முதல்வரா என கேட்டு கொண்டே காவல்துறையினர் தன்னை தாக்கியதாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே விவசாயி தாக்கப்பட்டது தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி விளக்கம் தர வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே விவசாயி தாக்கப்பட்டதைக் கண்டித்து பாப்பநாடு பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய விவசாயிகள், பாலனை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும், இந்திய அளவில் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.