கேபி முனுசாமி இருக்கும் வரை இரு அணிகள் இணைய வாய்ப்பே இல்லை… "தினகரன்" புகழேந்தி ஆவேசம்
ஓபிஎஸ் அணியில் கே.பி. முனுசாமி இருக்கும் வரை இரு அணிகள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி இருக்கும் வரை பிளவுபட்டுள்ள அதிமுகவின் இரு அணிகளும் இணையும் வாய்ப்பே இல்லை என்று தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்திற்கு வந்த புகழேந்தி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
முடிந்து போன முதியோர் இல்லமாக ஓபிஎஸ் அணி உள்ளது. நாஞ்சில் சம்பத் குறித்து கே.பி. முனுசாமி தரக்குறைவாக பேசியுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.

இரு அணிகளின் இணைப்பு பற்றி, ஓபிஎஸ் அணியினர் வந்தால் இணைப்பிற்கு வரவேற்போம், இல்லை என்றால் தொங்கிக் கொண்டு பின்னால் போக நாங்கள் தயாராக இல்லை என்று சேலத்தில் முதல்வர் பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். அதனால் நாங்கள் அவர்கள் பின்னால் போகத் தயாராக இல்லை.
ஓரிரு அமைச்சர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் இணைப்பு குறித்து தவறாக பேசவில்லை. எந்த ஒரு எம்எல்ஏவும் தவறாக பேசவில்லை. இந்த ஆட்சியின் முதல்வர் மற்றும் அதிமுகவின் செயலாளர் என யாருமே தவறாக பேசவில்லை.
தினகரன் யாருக்கு பணம் கொடுத்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆக, தினகரன் மீது தொடர்ந்துள்ள வழக்கு ஒரு பொய் வழக்கு. அதனால்தான் அதனை எதிர்த்து நாங்கள் போராட்டம் செய்தோம்.
இரு அணிகள் இணைவதற்கு முனுசாமி தடையாகயில்லை. கே.பி. முனுசாமி இருக்கும் வரை இரு அணிகள் இணைய வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவின் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட படங்கள் நேரம் வரும் போது வெளியிடப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications