சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. மீண்டும் பரபரப்புக்கு தயாராகிறது தமிழக சட்டசபை
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வரவுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சபாநாயகர் தனபால் மீது அடுத்த வாரம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வர உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதற்கு முன்னதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் திமுக கோரியது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. தனபாலுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இதனால் மைக்குகள் உடைக்கப்பட்டு திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
தனபாலுடனான தகராறின்போது மு.க.ஸ்டாலினின் சட்டை்க் கிழிந்ததாக கூறப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடிக்கு 122 எம்எல்ஏ-க்கள் ஆதரவு அளித்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் அலுவல் ஆய்வுக்குழு கூடி அவை நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
எனினும் அந்த தீர்மானமானது, உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஒரு வாரம் கழித்து எடுத்துக் கொள்ளப்படும் இந்த தீர்மானத்தை கொண்டு வர 35 எம்எல்ஏ-க்களின் ஆதரவு வேண்டும்.
தீர்மானம் விவாதத்துக்கு வரும் போது சபாநாயகருக்கு பதிலாக துணை சபாநாயகர்தான் அவையை நடத்துவார். அவர் முன்னிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்.