வருத்தம் தெரிவித்ததால் 6 மாத சஸ்பெண்ட் நடவடிக்கையிலிருந்து தப்பிய திமுக எம்எல்ஏக்கள்
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த அமளி தொடர்பாக 7 திமுக எம்எல்ஏ-க்கள் வருத்தம் தெரிவித்ததால் அவர்கள் மீதான சஸ்பெண்ட் பரிந்துரையை நிராகரிப்பதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் ரகளையில் ஈடுபட்ட 7 திமுக எம்எல்ஏ-க்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டதால் அவர்களை சஸ்பெண்ட் செய்ய சட்டசபை உரிமைக் குழுவின் பரிந்துரையை நிராகரிப்பதாக தனபால் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, சசிகலாவின் பதவி ஆட்டத்தால் முதல்வராக இருந்த ஓபிஎஸ் ராஜினாமா செய்விக்கப்பட்டார். சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் 122 பேர் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டது. இதனால் சட்டசபை குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆனால் ஆளுநரோ சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு உத்தரவிட்டார். அதன்படி பிப்ரவரி 18-ஆம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டு்ம என்று சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் திமுக அமளியில் ஈடுபட்டது.சபாநாயகரின் மைக்குகள் உடைக்கப்பட்டன. அனைத்து திமுக எம்எல்ஏ-க்களு்ம அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இந்த ரகளையில் ஈடுபட்ட 7 திமுக எம்எல்ஏ-க்களை 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று சட்டசபை உரிமைக் குழு சபாநாயகருக்கு பரிந்துரைத்தது. எனினும் இந்த பரிந்துரையை தனபால் நிராகரித்தார்.
இதுகுறித்து சபாநாயகர் தனபால் கூறுகையில் 7 எம்எல்ஏ-க்களும் தம்மை சந்தித்து வருத்தம் தெரிவித்ததால் நடவடிக்கை எடுக்க போவதில்லை. மேலும் அந்த 7 பேரில் 6 பேர் புதியவர்கள் என்பதால் எச்சரிக்கை மட்டும் விடுக்கிறேன்.எனவே உரிமைக் குழுவின் பரிந்துரையை நிராகரிக்கிறேன் என்றாா்.