திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: பாஜக
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இதை யாரும் நம்ப வேண்டாம். லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. அமைக்கும் கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக, இலங்கை தமிழர் படுகொலையை கண்டிக்கும் விதமாக இருக்கும்.
தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ் அமைப்புகள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது கண்டிக் கத்தக்கது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சி அலுவலகங்கள், கட்சி தலைவர்கள் வீடுகள் முன்பு சென்று போராட்டம் நடத்துவதை எதிர்க்கிறோம்.
தமிழ், தமிழர்கள் என்று ஏமாற்றிய காலம்போய், இப்போது தமிழர்களை வைத்தே தமிழர்களை அடிக்கும் காலம் உருவாகிவிட்டது. இந்த சம்பவத்தில் போலீசாரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. திருப்தி அளிக்கும் வகையில் போலீசாரின் செயல்பாடு அமையவில்லை. பிரச்சினை வந்தபின் நடவடிக்கை எடுப்பதைவிட வருமுன் தடுத்து இருக்கலாம்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.