அடுத்த ஆட்டம் தொடங்கியது.. மிரட்டிய கருமேகங்கள்.. சென்னையில் மீண்டும் மழை!
சென்னையில் பெரும்பாலான இடங்களில் காலை முதல் வெயில் சுள்ளென சுட்டெரித்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
Recommended Video
சென்னை: பெரும்பாலான இடங்களில் காலை முதல் வெயில் சுள்ளென சுட்டெரித்த நிலையில் தற்போது மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக பல இடங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது.
சென்னையில் நேற்று முழுவதும் மழை நீடித்தது. நாள் முழுவதும் நீடித்த மழை மற்றும் குளிரால் மக்கள் நடுங்கினர்.
இன்றும் விடுமுறை
தொடர் மழையால் சென்னையின் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுள்ளென வெயில்
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் மழை ஓய்ந்திருந்தது. இதனால் வடபழனி, அசோக் நகர், கேகே நகர், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சுள்ளென வெயில் காய்ந்தது.
இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை
அதேநேரத்தில் சில்லென காற்றும் வீசி வந்தது. மழை ஓய்ந்து வெயில் காய்ந்ததால் சென்னையில் இயல்பு நிலை மெல்ல திரும்பியது.
சட்டென வானிலை மாறும்
ஆனாலும் இந்த வெயிலை நம்பமுடியாது. சட்டென வானிலை மாறி திடீரென மழை பெய்யும் என்பதால் துணிகளை துவைத்து காயவைக்கும் பணியில் தாய்மார்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
நேற்று முழுவதும் விடாது பெய்த மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். இன்று காலையிலேயே தலைக்காட்டும் வெயிலால் மக்கள் அதிகளவில் வெளியில் நடமாடுவதையும் சென்னை மாநகரில் காணமுடிந்தது.
சென்னையில் மீண்டும் மழை
இந்நிலையில் சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மெரினா, சேப்பாக்கம், சாந்தோம் தி நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் கருமேகம் திரண்டு பலத்த மழை பெய்து வருகிறது.
சாரல் மழை பெய்கிறது
இதேபோல் புறநகர் பகுதியிலும் வெயில் விட்டு விட்டு காய்ந்தது. இந்நிலையில் குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களிலும் சாரல்மழை தொடங்கியுள்ளது. திருவெற்றியூர், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்துவருகிறது.