ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் விதிமீறல் எதுவும் இல்லை: ப.சிதம்பரம் விளக்கம்
சென்னை: ஏர்செல்- மேக்சிஸ் ஏர்செல் - மேக்சிஸ் பங்குகள் விற்பனை விவகாரத்தில் விதிகளின்படியே அன்னிய முதலீடுகள் மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) அனுமதி அளித்தது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
ஏர்ல்செ- மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சிபிஐ, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மேக்சிஸ் நிறுவன முதலீட்டுக்கு வரம்பை மீறி அனுமதி கொடுத்தது குறித்தும் விசாரித்து வருவதாக குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கை:
ஏர்செல்; மேக்சிஸ் தொடர்பான கோப்பு அப்போதைய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர், கூடுதல் செயலர் ஆகியோர் மூலம் அமைச்சராக இருந்த எனது பார்வைக்கு வந்தது.
இருவரும் அந்த நிறுவனத்தின் முதலீடுக்கு அனுமதி அளிக்கப் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் நான் உரிய காலத்தில் அனுமதி அளித்தேன்.
இந்த விவகாரத்தில் விதிகளின்படி மேற்கொண்ட தங்களின் செயல்பாடுகளை சம்பந்தப்பட்ட எஃப்ஐபிபி அதிகாரிகளே சிபிஐயிடம் ஏற்கெனவே விளக்கியுள்ளனர்.
அவர்களின் பரிந்துரைப்படி அமைச்சர் என்ற முறையில் அனுமதியை மட்டுமே நான் அளித்தேன். இதை சம்பந்தப்பட்ட கோப்புகள் சரியான முறையில் விளக்கும் என நம்புகிறேன்'
இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.