எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு அனுமதி கொடுத்தது யார்? அன்புமணி மீது விஜயகாந்த் மறைமுக புகார்
சென்னை: தமிழகத்தை சேர்ந்தவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சரியான உட்கட்டமைப்பு வசதியும், தேவையான அளவிற்கு அனுபவமிக்க பேராசிரியர்கள் இல்லாமலும் எஸ்.வி.எஸ் மருத்துவக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாகவும், தமிழக அரசின் முறையான அனுமதியின்றி இக்கல்லூரி செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜயகாந்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்த போது, இணை அமைச்சராக ஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமி இருந்தார். அவருக்கு கீழ்தான், ஆயூஸ் எனப்படும் ஹோமியோபதி மருத்துவமனைக்கான அனுமதி வழங்கும் பிரிவு இருந்தது என தெரிவித்துள்ளார்.
மூன்று மாணவிகளின் உயிரை காவு வாங்கிய எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்தது அன்புமணியா? அல்லது இணை அமைச்சர் பனபகாலட்சுமி அனுமதி கொடுத்தாரா என்ற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
மூன்று மாணவிகள் மர்ம மரணம்
சர்ச்சைக்குரிய எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மர்மமான முறையில் இறந்துபோனது குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். எஸ்.வி.எஸ் சித்த மருத்துவ கல்லூரியில் கட்டண கொள்ளை நடக்கிறது, அடிப்படை வசதிகள் இல்லை, நிர்வாகத்தினர் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய மாணவ, மாணவிகள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியருக்கு இதுபற்றி கோரிக்கை மனுக்கள் கொடுத்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அங்கீகாரம் இல்லாத கல்லூரியா?
அங்கீகாரம் இல்லாமல் இத்தனை நாட்களாக இந்த கல்லூரி நடைபெறுவதற்கு அதிமுக அரசு எப்படி அனுமதித்தது? மூன்று மாணவிகள் இறந்த பிறகு கல்லூரிக்கு சீல் வைக்கும் அதிமுக அரசு, இதற்கு முன்பு மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தியும், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், கல்லூரி மீது எவ்வித நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார் விஜயகாந்த்.
லட்சக்கணக்கில் கட்டணம்
அரசு அங்கீகாரம் இல்லாத இந்த கல்லூரியில் பொய் பிரச்சாரம் செய்து மாணவ-மாணவிகளை சேர்த்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளது இக்கல்லூரி நிர்வாகம். உள்கட்டமைப்பு வசதியில்லாத இந்த கல்லூரி நிர்வாகம், மாணவ-மாணவிகளை கொத்தடிமைகளாக நடத்தி வந்திருக்கிறது.
அனுமதி கொடுத்தது யார்?
மூன்று மாணவிகளின் உயிர்களை காவு வாங்கிய இந்த கல்லூரிக்கு, அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியும், இணை அமைச்சராக ஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமியும், மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதி கொடுத்திருக்கிறார்கள் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
அன்புமணி மறுப்பு
இதனை மறுத்துள்ள அன்புமணி, "மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்த போது, இணை அமைச்சராக ஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமி இருந்தார். அவருக்கு கீழ்தான், ஆயூஸ் எனப்படும் ஹோமியோபதி மருத்துவமனைக்கான அனுமதி வழங்கும் பிரிவு இருந்தது" என தெரிவித்துள்ளார். யார் அனுமதி கொடுத்தார்களோ ஆனால் பலியானது என்னவோ அப்பாவி மாணவிகள்தானே?