ஸ்தம்பித்தது சென்னை.. விடாமல் பெய்யும் மழை.. பல பகுதிகளில் பரவும் காய்ச்சலால் மக்கள் பீதி
சென்னை: வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 48 மணி நேரமாக விடாமல் பெய்து வரும் மழையால் சென்னை மாநகரம் பெரும் வெள்ளக்காடாகியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தொற்று நோய்கள் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 22ம் தேதி துவங்கியது. இந்த முறை முன்கூட்டியே தொடங்கி விட்டது. எடுத்த எடுப்பிலேயே பேய் மழையாக, அடை மழையாக நிற்காமல் கடந்த 2 நாட்களாக பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகில், உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இதனால் மேலும் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை - திருவள்ளூர் - காஞ்சிபுரம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதில் சென்னையில் விடாமல் பெருமழையாகவும், மிதமான மழையாகவும் பெய்து வருகிறது.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னையில் பெய்த மழையால், நகர் முழுவதும் பல சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், காலை முதல் இரவு வரை, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்ததையும் காண முடிகிறது.
எங்கு பார்த்தாலும் வெள்ளம் - அதிகாரிகளைக் காணோம்
மழை வெள்ளத்தால் நகரமே நாறிப் போய்க் கிடக்கிறது. ஆனால் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளுக்கு அதிகாரிகளைப் போட்டுள்ளதாக தெரியவில்லை. முதல் ரவுண்டு மழைக்கே இந்த நிலை என்றால் தொடர்ந்து மழை பெய்தால் என்னாகுமோ என்ற கவலையில் சென்னை மக்கள் உள்ளனர்.
மரங்கள் விழுந்து
சுரங்கப்பாதைகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின. தொடர்ந்து, இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது. சென்னையில் பெய்த மழையால், பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன; மின் வினியோகம் தடைபட்டது. மின் கம்பிகள் அறுந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
புதுச்சேரியில் கடல் சீற்றம்
தொடர் மழையால் புதுச்சேரி கடலில் சீற்றம் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை. புதுவை முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது.
ராமேஸ்வரம்
ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடல் சீற்றம் காணப்பட்டது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
நெல்லை - தூத்துக்குடி
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெயது வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நீர் தேங்கிய பகுதிகளில் கொசுக்கள் பெருகி வருகிறது.
மர்மக் காய்ச்சல்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த இரு மாவட்டங்களிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் மர்மகாய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பயத்தில் உள்ளனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
சிகிச்சைக்கு வரும் நோயாளிகள்
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தென்காசி, சங்கரன்கோவில், அம்பை அரசு மருத்துவ கல்லூரிகளிலும் கடந்த சில நாட்களாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சல் குறையாமல் நீண்ட நாட்களாக அவதிப்படுவோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. இதற்கிடையே தேசிய. கிராம சுகாதார திட்ட இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு சுகாதரத்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சுகாதார பணிகளும் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுளளன.