வடகிழக்கு பருவமழை தொடங்கியது: விவசாயிகள் மகிழ்ச்சி; இயல்பு வாழ்க்கை பாதிப்பு- ஒருவர் பலி
சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து 20 மணிநேரமாக பெய்து வரும் கனமழைக்கு ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து 20 மணிநேரமாக மழை பெய்துவருதால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 9 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
18 செ.மீ.மழை
சென்னையில் கடந்த 20 மணிநேரத்தில் 18 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒருவர் பலி
தியாகராயநகர் சாரங்கபாணி தெருவில் மழை நீரில் தேங்கியிருந்த வெள்ளநீரில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பவர் உயிரிழந்தார். அடையாறு சாஸ்திரி நகரில் மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விவசாயிகள் மகிழ்ச்சி
வடகிழக்குப் பருவமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை விவசாயத்திற்கு உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சராசரியாக 63 புள்ளி 5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 தினங்களாகவே மழை பெய்து வருகிறது.இதனால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடல் சீற்றம்
புதுச்சேரியில் கடல் சீற்றமும் அதிகரித்து காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. காரைக்கால் மாவட்டத்திலும் மழை நீடித்து வருகிறது.