நம்பிக்'கை' போதும்.. ஒரே நாளில் சமூக வலைதளங்களை அதிர வைத்த குழந்தையின் வீடியோ!
முயன்றால் இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளி குழந்தையொன்று தானாகவே சறுக்குமரம் ஏறி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களை ஒரே நாளில் அதிர வைத்துள்ளது.
சென்னை : முயற்சி இது இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக கை, கால்கள் இல்லாத குழந்தையொன்று தானாகவே முயன்று சறுக்கு மரம் ஏறி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது.
வளரும் தலைமுறையினருக்கு வாழ்க்கையை எதிர்த்து போராடும் சிந்தனை என்பதே இல்லாமல் போய்விட்டது என்று எண்ணத் தோன்றுகிறது. தாய், தந்தை இருவரும் நல்ல வேலையில் அதிக சம்பளம், குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து கடைசி வரை அடை காக்கும் கோழிக்குஞ்சுகளைப் போல பெற்றோரின் கை பிடித்தே வளர்கின்றனர் நகரத்தில் வசிக்கும் குழந்தைகள்.
பள்ளிப்படிப்பு, பள்ளி நேரம் போக எஞ்சிய நேரத்தில் பாட்டு, டான்ஸ், டிராயிங், என இல்லாத வகுப்பில் எல்லாம் சேர்க்கப்படுகின்றனர். வெளி உலகம் என்றால் என்னவென்றே தெரியவிடாமல் பெற்றோரின் முழு நேரப் பார்வையில், அவர்கள் விரும்பியபடியே குழந்தைகளை வளர்க்கின்றனர்.
தன்னம்பிக்கை இல்லை
இதன் விளைவாக எல்லாம் எளிதில் கிடைக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று கிடைக்காவிடில் அது மிகப்பெரும் ஏமாற்றத்ததை தந்துவிடுகிறது. இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படும் குழந்தைகள் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.
|
அதிர வைத்த வீடியோ
வாட்ஸ் அப், முகநூல் , டுவிட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் கடந்த 2 தினங்களாக மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்று சறுக்கமரம் ஏறி விளையாடும் ஒரு வீடியோ அனைவர் மனதிலும் இருக்கும் நம்பிக்கையை தட்டி எழுப்புகிறது. குழந்தைகள் என்றால் விளையாடுவது சகஜம்தானே இதில் என்ன புதிய விஷயம் என்று நினைக்கலாம்.
விடா முயற்சி
ஆம், இது புதிய விஷயம் தான் சறுக்கு மரம் ஏற நினைக்கும் அந்தக் குழந்தைக்கு கை, கால் இரண்டுமே கிடையாது, தலையாலும், கை மற்றும் கால் அங்கங்களை பயன்படுத்தி உந்தி உந்தி ஏறி சுமார் சில நிமிட போராட்டத்திற்கு பிறகு தன்னம்பிக்கையை விட்டுவிடாமல் விடா முயற்சியுடன் போராடி இறுதியில் தானாகவே சறுக்கு மரத்தில் மேலிருந்து கீழாக வந்து சந்தோஷப்படுகிறது.
நம்பிக்கையை விதைக்கும் வீடியோ
குழந்தையின் இந்த முயற்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து, உற்சாகம் கொடுக்கும் அந்தத் தாய் குழந்தையின் இந்த செயலை படம்பிடித்தும் வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த 1.51 நிமிட வீடியோ வாழ்வில் நம்மால் எதுவும் முடியாது என்று நினைப்பவர்களுக்கு எதுவும் கடினமல்ல என்பதை உணர்த்துவது போல அமைந்துள்ளது.
ஆனந்த் மஹிந்திரா கருத்து
மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முதலில் இந்த வீடியோவை பார்க்க தான் விரும்பவில்லை என்றாலும் இப்போது எனக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்றும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த டுவீட் 48 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.