நஞ்சில்லா உணவுக்கு அங்கக முறையில் தென்னை சாகுபடி.. அசத்தும் அந்தியூர் விவசாயி!
கரூர்: அந்தியூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அங்கக முறையில் தென்னை சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.
இந்த அங்கக முறையிலான தென்னை சாகுபடியானது நஞ்சில்லாத உணவுக்கு வித்திடும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
அந்த அருமையான விவசாயியின் கதை இது...
அந்தியூர் செல்வராஜ்
தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள அந்தியூர் பகுதியை சார்ந்தவர் அந்தியூர் செல்வராஜ். கடந்த 1976 ம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து விட்டு தற்போது இயற்கை வேளாண்மையில் புதிய சாகசம் செய்து வருகிறார்.
தென்னைகளுக்கு உயிர்
இயற்கை வேளாண்மை என்றால் சாதாரண விஷயம் அல்ல. வீழ்ந்த தென்னைகளை மீண்டும் உயிர்த்தெழ செய்துள்ளார். அதாவது கடந்த 1980 ஆம் வருடம் 25 ஏக்கரில் 500 தென்னைகளை நடவு செய்துள்ளார். பின்னர் 1986 ம் ஆண்டு 500 தென்னைகளும், 2001 ம் ஆண்டு 500 தென்னைகளும் சாகுபடி செய்த இவருக்கு தண்ணீர் வறட்சியினால் தென்னையை காப்பாற்ற முடியவில்லை.
வெட்ட நினைத்த செல்வராஜ்
ஒரு வருடத்திற்கு 1 தென்னை மரத்திற்கு 7 காய்கள் அறுவடை செய்த அந்தியூர் செல்வராஜ் அம்மரங்களை வெட்டலாம் என முடிவெடுத்தார். பிறகு 2004 க்கு பிறகு அறுவடை சுத்தமாக நின்றுவிட தென்னை மரங்களை வெட்டி விடலாம் என முடிவெடுத்து பின்னர் சக நண்பர்களின் ஆலோசனைப்படி இயற்கை வேளாண் முறைக்கு சென்றால் மட்டுமே தென்னை மரத்தை காப்பாற்ற முடியும் என்ற அபரிவிதமான நம்பிக்கையில் விவசாயம் செய்தார்.
அங்கக முறைக்கு மாறினார்
பிறகு தென்னையை காப்பாற்ற இயற்கை வழி விவசாயத்தை பின்பற்றினார். அப்போது பாரம்பரிய வேளாண் முறையிலிருந்து அங்கக முறைக்கு மாறப் பல மாற்றங்கள் தேவைப்பட்டன. என்பதை உணர்ந்த அந்தியூர் செல்வராஜ், அங்கக முறைக்கு மாறினார். அது என்ன அங்கக முறை என்றால் மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய் ஆகியன எங்கு எங்கு உள்ளனவோ. அது போல பூமித்தாய்க்கு உண்டான அணிகலன்கள் இருக்க வேண்டும்.
இருக்க வேண்டியவை இருந்தால்
உதாரணத்திற்கு மண்புழுக்கள், நுண்ணுயிர்கள், பாக்டீரியாக்கள், கரையான்கள், பூஞ்சானங்கள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் என அங்கக முறைப்படி அந்தந்த நிலத்தில் இருப்பவை இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். 2005 ம் வருடம் மரம் ஒன்றிற்கு 7 காய்கள் காய்த்த தென்னை மரங்கள் படிப்படியாக உற்பத்தி அதிகரித்து கொண்டே வந்து கடந்த 2013, 2014 ம் வருடம் மரம் ஒன்றிற்கு 120 காய்கள் மகசூல் எடுத்துள்ளனர்.
எதையும் விற்பதில்லை
இவர் அங்கக வேளாண்மை முறைக்கு எந்த வித இடுபொருட்களும் வெளியே இருந்து நிலத்திற்குள் அனுமதித்ததில்லை. மேலும் இவரது தோப்பில் கிடைக்கும் தென்னை மட்டைகள், செடிகள் என எதையும் விற்பதில்லை. 4 தென்னைகளுக்கு நடுவே ஒரு தண்ணீர் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து, அதன் மூலம் நீர் பாய்ச்சுகிறார்கள். தெளிப்பு நீர் பாசனத்தை சுற்றிலும் தேங்காய் நார், பாளை ஆகியவற்றுடன் மண்புழுக்கள், அதற்கு மேல் தென்னை மட்டைகளை போட்டு மூடி வைத்து விடுகிறார்கள்.
உழுவதில்லை.. களை எடுப்பதில்லை
இவர்களது தோப்பில் உழுவதில்லை. களை எடுப்பதில்லை. உரம், பூச்சிக்கொல்லிச் செலவும் இல்லை. 5 பசு மாடுகள் மூலம் கிடைக்கும் சாணம், கோமியமே உரமாகிறது. இவரே சொந்தமாக பஞ்சகாவ்யா தயாரித்து மரங்களுக்கு இடுகிறார்கள்.
நம்மாழ்வாரின் பாராட்டு
மேலும் இவர்களது அங்கக வேளாண்மையை கேள்விப்பட்ட மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இவரை பாராட்டியுள்ளார். மேலும் இந்த விவசாயி இதுவரை அங்கக முறைக்கு 25 விவசாயிகளை மாற்றி இருக்கிறார்கள். மேலும் வேளாந்துறை, பொதுப்பணித்துறை, நீர் வள மேலாண்மை மற்றும் விவசாயிகள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சந்தித்து அங்கக சாகுபடி குறித்து விளக்க மளித்து வருகிறார்.
தொடர்பு கொள்ள
இவரது விவசாய அனுபவங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 99768 07692 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.