காவிரி ஆற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளிய விவகாரம்: ஒருவர் கைது
கரூர்: காவிரி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய சம்பவத்தில் குமாரபாளையத்ச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் பல பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் அமைத்து மணல் அள்ளி வருகின்றது. ஆனால் அதே வேளையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் சிண்டிகேட் அமைத்து, அரசு அனுமதி பெறாமல் உயர் அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு காவிரி ஆற்றின் பல பகுதிகளி்ல் இரவு நேரங்களில் மணல் அள்ளி வந்தனர்.
இந்த நிலையில் என்.புதூர் பகுதி காவிரி ஆற்றில் அனுமதியின்றி இரவு நேரங்களில் லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் அள்ளப்படுவதாக கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்திக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரகசிய தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து காவிரி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், தளவாபாளையம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, வாங்கல் பகுதியில் மணல் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி மணல் அள்ளியதற்கான ரசீதை கேட்டபோது அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குமாரபாளையத்தை சேர்ந்த கோபிநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அரசு அனுமதி இன்றி மணல் அள்ளி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.