ஓடும் பஸ்சில் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கொலை: முக்கிய குற்றவாளி சரண்
விருதுநகர்: சாத்தூரில் அரசுப்பேருந்தில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரஃபீக் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை 17ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காந்தாரி,48. கோவில்பட்டியில் சொந்தமாக 5 ஆம்புலன்ஸ்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு கனகராஜ், 27, கருப்பசாமி, 25, மந்திரமூர்த்தி, 22 ஆகிய 3 மகன்கள் மற்றும் சத்யா,17 என்ற மகள் உள்ளனர்.
கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த முகமது ரஃபீக் மகன் அப்துல்லா ,18. இவர் கடந்த ஜூலை 2ம் தேதி நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்தாரி மகன்களான கனகராஜ், மந்திரமூர்த்தியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதைதொடர்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எண்ணி, கருப்பசாமி கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தனியார் ஆம்புலன்ஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 9ம் தேதி கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு கருப்பசாமி வந்தார். விடுமுறை முடிந்து புதன்கிழமையன்று காலை கோவைக்கு கிளம்பினார். நெல்லையிலிருந்து கோவை சென்ற அரசு பேருந்தில் கருப்பசாமி ஏறினார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் படந்தால் சந்திப்பில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டபோது கருப்பசாமிக்கு பின் சீட்டில் அமர்ந்து வந்த மர்ம நபர் கருப்பசாமியின் பின்னந்தலையில் துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
சுட்டுக்கொன்ற மர்ம நபர் சர்வீஸ் ரோடு வழியாக சாத்தூர் நகருக்குள் தப்பி ஓடினார். சக பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். இதுதொடர்பாக பஸ் கண்டக்டர் சிவராஜன் சாத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து கருப்பசாமியின் பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டு மூலம் முகவரியை கண்டுபிடித்தனர்.
தென்மண்டல டிஐஐி ஆனந்தகுமார் சோமானி, விருதுநகர் எஸ்பி ராஜராஜன், சாத்தூர் டிஎஸ்பி குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. சாத்தூர் நகர் மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இன்று காலையில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜெயிலில் இருந்த கூலிப்படையை சேர்ந்த ஒருவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் எடுத்து எனது பேரனை கொலை செய்துள்ளனர் என்று கருப்பசாமியின் தந்தை கூறினார். இந்த நிலையில் கோவில்பட்டியை சேர்ந்த ரஃபீக் என்பவர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை அக்டோபர் 17ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 17ம் தேதியன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த சம்பவத்தில் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 9 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஃபீக் சொல்லப் போகும் தகவலை வைத்தே கருப்பசாமியை கொலை செய்த கொலையாளியை போலீஸ் நெருங்க முடியும்.