ஆறுகள் ஓடிய கதிராமங்கலம், பாலைவனமான அவலம்.. காரணம் ஓஎன்ஜிசி! #கதிராமங்கலம்
ஒருபுறம் காவிரி ஆறு, இன்னொருபுறம் விக்கிரமனாறு என்று சலசலத்து ஓடிய கதிராமங்கலத்தில் இன்று நிலத்தடி நீர் பாழ்பட்டுள்ளது காரணம் ஓஎன்ஜிசி என்று உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் நிலத்தடி நீர் வற்றிப்போய் இன்றைக்கு குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். காரணம் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள்தான் என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டு. காவிரி ஆறு ஓடிய கிராமம், நெல் விளைந்து செழிப்போடு காணப்பட்ட கிராமம் இன்றைக்கு போரட்டகளமாகியுள்ளது.
கதிராமங்கலம் கிராம மக்கள் தற்பொழுது நிம்மதி இழந்து தவிக்கின்றனர். இங்கு ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு-எண்ணெய் கிணறுகளை சீரமைப்பதற்காகவும் புதிய குழாய்களை பதிப்பற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ள அதிநவீன ராட்சத இயந்திரங்களை கண்டு அச்சமடைந்த இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் இதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஒ.என்.ஜி.சி மற்றும் காவல்துறையினரின் அத்துமீறல்களை கண்டித்து இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள். இதனை கிழித்தெறிந்த காவல்துறையினர், இக்கிராம மக்களை மிரட்டியதால் பலரும் ஊரை காலி செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் கதிராமங்கலம் மக்கள் படும் அவலத்தை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
தண்ணீரா இது?
காவிரி டெல்டா கிராமம் மற்றும் பேரூராட்சிகள் அனைத்திலும் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஒ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோல், கேஸ் எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக இங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகின்றன.
குடிநீருக்கு திண்டாட்டம்
2002ஆம் ஆண்டு இப்பகுதியில் இக்குழாய்களை அமைக்கும்போது, தங்களுக்கும் இதில் வேலை கிடைக்கும், பொருளியல் உயரும் என்றெல்லாம் ஓ.என்.ஜி.சி.யினர் கூறியதை நம்பி, இப்பகுதியில் ஆழ்குழாய்கள் அமைக்க பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர். ஆனால், நாளடைவில் இப்பகுதியின் நிலத்தடி நீரில் எண்ணெய் வாடை வருவதும், கிணறுகள் வற்றி குடிநீருக்கே மக்கள் திண்டாடும் நிலை வந்த பிறகுதான், இப்பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய்களின் பாதிப்பை உணரத் தொடங்கினர்.
குடிநீருக்கே தவிக்கும் மக்கள்
கடந்த 2015ஆம் ஆண்டு, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் அமைத்திருந்த எண்ணெய்க் குழாய் வெடித்ததில், ஜெயலட்சுமி என்பவரின் முகம் கருகிவிட்டது. ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றின் காரணமாக கதிராமங்கலத்தின் நிலத்தடி நீர் முழுமையாகக் கெட்டுப் போய் உள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமல்ல குடிநீருக்கு கூட தவிக்கின்றனர்.
ஒஎன்ஜிசி நிறுவனம்
அந்த பாதிப்புகளின் வெடிப்பாகவே, கடந்த மே மாதம் இந்தப் பகுதியில் ஓ.என்.ஜி.சி.யினர் ஏற்கெனவே அமைத்துள்ள ஆழ்குழாய்க் கிணற்றைப் பராமரிக்க வருகிறோம் என்று கூறிய போது மக்கள் போராட்டம் வெடித்தது. காவல்துறையினரை வைத்து கடும் அடக்குமுறைகளை ஏவி, புதிய ஆழ்குழாய்க் கிணற்றையே ஓ.என்.ஜி.சி.யினர் நிறுவியுள்ளனர்.
|
கதிராமங்கலத்தின் பெருமை
கதிராமங்கலத்தின் பெருமை பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஒருவர். கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊர் 'கதிர்வேய்ந்த மங்கலம்' என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார். சடையப்ப வள்ளல் கம்பருக்கு நெற்கதிரை கூரையில் வேய்ந்து கொடுத்ததால்தான், கதிர் வேய்ந்த மங்கலம் என்ற பெயர் வந்தது என்றும் பெருமை பொங்க பதிவிட்டுள்ளனர்.
தண்ணீர் பஞ்சம் ஏன்?
இதுவே பின்னர் நாளடைவில் மருவி கதிராமங்கலம் என்றானது. ஒருபுறம் காவிரி ஆறு, இன்னொருபுறம் விக்கிரமனாறு இருப்பதால், நடுவிலுள்ள பகுதி - "நடுவெளி" என்று அழைக்கப் பட்டது. அதுவே இன்று "நறுவளி" எனப்படுகிறது. இரண்டு பக்கமும் தண்ணீர் ஓடியதால், இந்தப் பகுதி யில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதாக வரலாறே கிடையாது! ஆனால், இந்த ஆண்டு குடிநீருக்காக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.. என்று ஆதங்கப்படுகிறார் புலவர் அரங்க. கலியமூர்த்தி!
பட்டுப்போன தென்னை மரங்கள்
கதிராமங்கலம் கிராமத்தில், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினரின் முற்று கையின் கீழ் மக்கள் தங்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர், நிலத்தடி நீர் பாழ்பட்டு மஞ்சள் நிறத்தில் எண்ணெய் வாடையுடன் வருகிறது. ஆழ்குழாய் கிணற்றுக்கு சில அடி தொலைவிலிருந்த தங்கள் தென்னந்தோப்பில் தென்னை மரங்கள் பட்டுப்போய்விட்டதாகத் தெரிவித்தார்.
வயல்கள் பட்டுப்போச்சே
கதிர்வேய்ந்த மங்கலம் இன்றைக்கு பட்டுப்போன வயல்களுடன் குடிக்க கூட நீர் இல்லாத கிராமமாக மாறி வருகிறது. எண்ணெய் எடுப்பதற்காக நெல்விளையும் பூமியையும், தென்னைமரங்களையும் பட்டுப்போக வைப்பது நியாயமா என்று கேட்கின்றனர் கிராம மக்கள். மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன.