2,779 உயிர்களைக் காப்பாற்றிய உடல் உறுப்பு தானம் – தமிழகத்தில்!
சென்னை: எத்தனையோ இடர்ப்பாடுகள், கருத்து வேறுபாடுகள், மோதல்கள் நிலவினாலும் காலம்காலமாக மனிதம் தழைத்தோங்கி வருவதற்கு முக்கியமான காரணம் தானம் என்ற ஒன்றுதான்.
அப்படிபட்ட ஈகை என்ற மகத்துவத்தில் சமீபகாலமாக முதலிடம் பெற்றுள்ள தானம் "உடல் உறுப்புகள்" தானம்.
மற்ற தானமெல்லாம் பொருட்களை தரும்போது ஒருவரின் உயிரையே மீட்டுத்தரும் அளப்பரிய ஒன்றுதான் இந்த உடல் உறுப்புகள் தானம்.
உயிர்களுக்கு ஒரு தானம்:
இறந்து உயிர் வாழவைக்கும் சிறப்பு பெற்ற "உடல் உறுப்பு தானம்" தினம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
2,779 உடல் உறுப்புகள் தானம்:
இத்தினத்தில், தமிழகத்தில் இதுவரை 2,779 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன என தமிழ்நாடு மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்டு 6 ஆம் தேதி:
இந்தியா முழுவதும் உடல் உறுப்புதான தினம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டம் தொடங்கப்பட்டது.
504 பேர் தானம்:
திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 504 பேரிடம் இருந்து மொத்தம் 2779 உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.
வாழவைக்கும் மனிதர்கள்:
இதுவரை 88 இதயம், 40 நுரையீரல், 464 கல்லீரல், 898 சீறுநீரகங்கள், 2 கணையம், ஒரு சிறுகுடல் என மொத்தம் 1494 முக்கிய உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. இதுதவிர 516 இதய வால்வுகள், 762 கண்கள், 7 நபர்களின் தோல்கள் என மொத்தம் 2779 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளது.
முன்னோடி மாநிலம் தமிழ்நாடு:
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழகம்தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழ்நாடு மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடல் உறுப்பு தானம்:
மக்கள் தொகை, லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றிருந்தாலும், மனிதர்களின் வாழ்வை மீட்டுத்தரும் இந்த மகத்தான உடல் உறுப்புதான பட்டியலில் முன்னணி இடம் பிடித்து மற்ற எல்லாக் குறைகளையும் மறக்கச் செய்து விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.