சட்டசபை தேர்தலில் ஒரு ஓட்டு 'ரேட்' ரூ500 அல்லது ரூ1,000' இருக்குமாம்... மாஜி 'நிதி' ப.சி பேச்சு
சிவகங்கை: வரும் சட்டசபை தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ500 அல்லது ரூ1,000 தர திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் பேசிக் கொள்வதாக கூறுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இத்தகைய ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் தொடர்ந்தால் ஜனநாயகத்தை பாழ்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் பேசியதாவது;
தமிழகத்தில் 5வது முறையாக ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் ஏகப்பட்ட யாகங்கள், பாதயாத்திரைகள் போன்றவற்றைப் பார்க்கும் போது கடவுள் மீதான என்னுடைய நம்பிக்கையை சற்று குறைத்துவிடுகிறது...
அண்மைக்காலமாக ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் என்பது கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த கலாசாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகால சாதனையை சொல்லி பிரசாரம் செய்தது. ஆனால் ரூ200 கொடுத்து அத்தனையையும் தோற்கடித்துவிட்டனர்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ரூ200க்கும் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள்.. இப்போது பொதுமக்கள் பேசிக் கொள்வது என்னவெனில் சட்டசபை தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ500 அல்லது ரூ1,000 கொடுப்பார்கள் என்பதுதான்.. இந்த நிலைமை நீடித்தால் ஜனநாயகம் என்பது புதைகுழிக்குப் போய்விடும்.
மத்தியில் ஆட்சியை அமைத்த பிரதமர் மோடி ஓராண்டு காலத்தை நிறைவு செய்துள்ளார். ஆனால் அவருக்கு வாக்களித்த மக்கள் அதிருப்தி அடைந்து போயுள்ளனர். இந்த ஓராண்டு காலத்தில் 18 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருக்கிறார் மோடி.
மாணவர்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கி வந்த கல்விக் கடனை மோடி அரசு நிறுத்திவிட்டது. நில ஆர்ஜித மசோதாவின் மூலம் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது மோடி அரசு.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பையும், முதலாளிகளுக்கு லாபத்தையும் தரும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்களை பெயர் மாற்றம் மட்டும் செய்து, பா.ஜ.க புதிய திட்டமாக அறிவித்து மக்களை ஏமாற்றுகிறது.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்.