தமிழகத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுருவல்- காவல்துறை ”திடுக்” தகவல்!
சென்னை: தமிழகத்தில் மேலும் 5 பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களை கண்டறிய காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கைதான அருண் செல்வராசனை விசாரித்த அதிகாரி ஒருவர், ஏற்கனவே கைதான தமீம் அன்சாரி, ஜாகீர் உசேன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளார்.
தற்போது பிடிபட்டுள்ள அருண் செல்வராசனையும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
வாயைத் திறக்காத தமீம்:
அதில், "தமீம் அன்சாரி வாயைத் திறந்து ஒழுங்காக பேசாவிட்டாலும் ஜாகீர் உசேனும், அருண்செல்வராசனும் சிரமம் இல்லாமல் தகவல்களை கூறியுள்ளனர்.
ஜாகீர் உசேன்:
ஜாகீர் உசேன் இலங்கையில் கண்டியில் பிறந்தவர். 10 ஆவது வகுப்பு வரைதான் படித்துள்ளார். திருமணம் ஆனவர். அவர் துணி வியாபாரி போல, தமிழகத்திற்குள் நுழைந்திருக்கிறார். அவர் கள்ள நோட்டுகளையும் புழக்கத்தில் விட்டார்.
அருண் செல்வராசன்:
தற்போது பிடிபட்டுள்ள அருண்செல்வராசன் பட்டப்படிப்பு படித்துள்ளார். விமானம் ஓட்டவும் பயிற்சிக்கு சென்றுள்ளார். அவர் இலங்கையில் கொழும்பில் பிறந்துள்ளார். திருமணம் ஆகாதவர். அவரது தந்தை கொழும்பில் நட்சத்திர ஹோட்டல் நடத்தி உள்ளார்.
சென்னை வருகை:
ஹோட்டலில் நஷ்டம் ஏற்படவே, அருண்செல்வராசன் குடும்பம் சென்னை வந்துள்ளது. 8 ஆவது வகுப்பில் இருந்து 10 ஆவது வகுப்பு வரை அவர் சென்னையில் படித்துள்ளார். அதன்பிறகு மீண்டும் இலங்கை சென்று பட்டப்படிப்பு படித்திருக்கிறார்.
பாகிஸ்தான் உளவாளி ஆனவர்:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மீண்டும் தமிழகம் வந்துள்ள அருண் செல்வராசன், பாகிஸ்தான் உளவாளியாக தமிழகத்திற்கு வந்துள்ளார். அவர் தமிழகம் வந்துள்ள தகவலை, ஜாகீர் உசேன் மற்றும் தமீம் அன்சாரி மூலம், தெரிந்துகொண்டோம். அவரது செல்போன் நம்பரும் கிடைத்து விட்டது.
உளவுத் தொழில்:
அவரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தோம். அவர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை நடத்திக்கொண்டே, உளவு பார்க்கும் தொழிலையும் செய்துள்ளார். அவர் நடத்திய ஐஸ் ஈவென்ட் நிறுவனம், நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது. அவரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது.
இன்னும் சிலர் ஊடுருவல்:
அவர் தனது வங்கி பணப்பரிமாற்றங்கள் அத்தனையையும், உத்திர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் உள்ள ஒரு வங்கி மூலம்தான் செய்துள்ளார். மேலும் 4 அல்லது 5 பேர் உளவு கும்பலைச் சேர்ந்தவர்களில் தமிழகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. அது பற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்''என்று தெரிவித்துள்ளார்.