இரவோடு இரவாக போனது தாடி… பழைய பன்னீர்செல்வம் ஆன முதல்வர்
சென்னை: வெள்ளை முடியும் சோக தாடியுமாய் 35 நாட்கள் வலம் வந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சொந்த ஊருக்குப் போய் தாடியை எடுத்து பளீச் பன்னீர்செல்வமாய் மாறியுள்ளார்.
முதல்வர் தாடி வைத்தாலும் நியூஸ்... தாடி எடுத்தாலும் நியூஸா என்று யோசிக்க வேண்டாம். இது வெறும் தாடி செய்தி மட்டுமல்ல... சொந்த ஊரில் முதல்வரின் பவ்யம், மக்களை சந்தித்த எளிமையும் கலந்து இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதை அடுத்து முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தாடியோடு சோகமுகமாய் இருந்தனர்.
அக்டோபர் 18ம் தேதி ஜெயலலிதா மீண்டும் சென்னை திரும்பினாலும் சோக கெட் அப் மாறவேயில்லை. ஒரு வழியாக சில அமைச்சர்கள் மொட்டை போட்டனர். அதிமுகவினர் கறுப்பு சட்டையை கழற்றிவிட்டு வெள்ளைக்கு மாறினர்.
ஆனால் முதல்வர் பன்னீர் செல்வம் மட்டும் தாடியோடு இருந்தார், தேவர் ஜெயந்திக்குப் பசும்பொன் போனபோது கூட தாடி கெட்அப் மாறவில்லை.
முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதத்துக்குப் பிறகு கடந்த 31ம் தேதி தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் புறப்பட்ட முதல்வர் பன்னீர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தனது ஊரான பெரியகுளம் சென்றார். நள்ளிரவு வரை நண்பர்கள் உறவினர்களுடன் பேசிவிட்டு உறங்கப்போனார்.
சிவன் தரிசனம்
காலையில் பெரியகுளம் மலையில் உள்ள சிவன் கோயிலுக்குப் போய் அங்கே சிவன் தரிசனத்தை முடித்ததும், தனது சொந்தத் தொகுதியான போடிக்குச் சென்றார்.
நிவாரண நிதி
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது உயிரிழந்த அதிமுகவினருக்கு ரூபாய் மூன்று லட்சம் நிவாரணத் தொகை கொடுக்கும் பணியை தனது தொகுதியில் ஆரம்பித்தார். முக்கிய இடங்களில் கூட்டத்தைப் பார்த்ததும் காரில் இருந்தபடியே வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தார் முதல்வர். பலரும் பூங்கொத்து, சால்வை சகிதமாக நின்றிருந்தனர். ஆனால் யாரிடமும் வாங்காமல் தவிர்த்துவிட்டார்.
தங்க கவசம்
பிற்பகலில் மதுரைக்குச் சென்ற அவர், அங்கே முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு வழங்கிய தங்கக் கவசத்தை திருப்பி வங்கியில் வைக்கும் சம்பிரதாயங்களை முடித்தார்.
பளீச் பன்னீர் செல்வம்
அங்கிருந்து நேராக போடி சென்ற முதல்வர் அங்கு வாடகைக்கு எடுத்துள்ள வீட்டில் தங்கினார். இரவு தாடியுடன் படுக்கப்போன முதல்வர் பன்னீர் செல்வம், மறுநாள் காலை வெளியே வந்தபோது தாடியை எடுத்து, மீசைக்கு டை அடித்து பிரகாசமாகக் காட்சியளித்தார். இதற்காகவே சலூன்காரரை பெரியகுளத்தில் இருந்து போடி வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர்.
தேவர் மகன் ஸ்டைலில்
பன்னீர் செல்வத்தின் இந்த பளீச் மாற்றம் ஒரு கணம் தேவர் மகன் கமலைத் தான் நினைவூட்டியது. அந்தப் படத்தில் இன்ட்ரவலுக்கு முந்தைய சீனில் கமல் தனது தாடியை அகற்றிவிட்டு கடா மீசையுடன் அவதாரம் எடுப்பார். அது மாதிரி தான் இருந்தது ஓ.பியின் சேஞ்ச் ஓவரும்.
பழைய பன்னீர் செல்வமாய்
மீண்டும் பெரியகுளம் வீட்டுக்குச் சென்றவர் அங்கு காத்திருந்த மக்களிடம் மனுக்களை வாங்கிக்கொண்டு, இரவு திண்டுக்கல் வந்தார். அங்கிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலம் அதே பழைய பன்னீர் செல்வமாய் சென்னைக்குப் புறப்பட்டார் முதல்வர்.
35 நாள் விரதம்
35 நாட்கள் தான் விரதத்தை முடித்துவிட்டார் முதல்வர் பன்னீர் செல்வம், தாடி எடுத்து சோகத்திற்கு விடை கொடுத்தது போல ஓட்டு போட்ட மக்களுக்கும், முதல்வர் பதவிக்கும் ஏற்றார் போல ஒரிஜினல் மக்களின் முதல்வராக மாறவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.