இரும்பு ஸ்கேலால் 2ம் வகுப்பு மாணவனுக்கு அடி - ஆசிரியையை கண்டித்து பெற்றோர் முற்றுகை
கரூர்: கரூரில் இரண்டாம் வகுப்பு மாணவரை இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியையை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகை இட்டனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக சாந்தி உள்ளார். இந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
தான்தோன்றிமலையை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் சவுந்தர்ராஜன் என்ற மாணவர் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் வகுப்பு ஆசிரியை பாக்கியம் நான்கு நாட்களாக மாணவன் சவுந்தர்ராஜனை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் நிறுத்தி வைத்ததாக கூறி மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கரூர் உதவி துவக்கக் கல்வி அலுவலர் ராமதிலகம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ சுமதி மற்றும் போலீஸார் பள்ளிக்கு வந்து மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த வாரம் சவுந்தர்ராஜன் குறும்பு செய்ததாக கூறி வகுப்பு ஆசிரியை பாக்கியம் இரும்பு ஸ்கேலால் அடித்துள்ளார். இதில் சவுந்தர்ராஜனின் தலையில் காயம் ஏற்பட்டது.
மறுநாள் மாணவனின் பெற்றோர், இது பற்றி ஆசிரியை பாக்கியத்திடம் கேட்டபோது, "மாணவர்களுடன் விளையாடிய போது கீழே தவறி விழுந்ததில் காயமடைந்து விட்டான்" என கூறியுள்ளார்.
பெற்றோர்கள் பள்ளியை விட்டு சென்ற பிறகு "நான் அடித்தததை எதற்க்காக உன் பெற்றோகளிடம் சொன்னாய்" என்று மாணவன் சவுந்திரராஜனை நான்கு நாட்களாக ஆசிரியை பாக்கியம் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. மாணவனை வெளியில் நிற்க வைக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியை கூறியும் அதை கேட்காமல் மாணவனை வகுப்புக்குள் அனுமதிக்காத ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
பள்ளியில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர், "இதுகுறித்து, ஆசிரியையிடம் விளக்கம் கேட்ட பிறகு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.