ஆம்னி பஸ்கள் கூடுதல் பணம் பறித்தால் 044 24794709 என்ற எண்ணுக்குப் போன் செய்யுங்கள்!
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக வெளியூர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் கேட்டு நிர்ப்பந்திக்கப்பட்டால் 044 24794709 என்ற எண்ணுக்குப் புகார் தரலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வருவதால் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொங்கலுக்காக ஊர்களுக்குப் போகும் மக்களிடம் கூடுதல் கட்டணம் கேட்கப்பட்டால், அதுகுறித்து தொலைபேசி மூலமாக புகார் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றும் 1175 அரசுப் பேருந்துகள்
நேற்று முதல் பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. இன்று 1175 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கும் இயக்கப்படுகின்றன. நாளையும் பெருமளவிலான பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலைமோதும் மக்கள் கூட்டம்
அரசு விட்டுள்ள சிறப்புப் பேருந்துகளில் ஊர்களுக்குச் செல்ல மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
ஆம்னி பஸ்களுக்கும் கூட்டம்
அதேசமயம், ஆம்னி பஸ்களுக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் நெருக்கடியைப் பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குமுறுகிறார்கள்.
புகார் தரலாம்
இதைத் தடுக்க அதிக அளவில் பஸ்களில் கட்டணம் கேட்டால், அதுகுறித்து 044 24794709 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ. 1000 வரை வசூல் கொள்ளையடிக்கும் ஆம்னி பஸ்கள்
மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்குப் போகும் வெளியூர் பயணிகளிடம் தலைக்கு ரூ. 1000 வரை ஆம்னி பஸ்களில் கேட்பதாகவும் மக்கள் பகீர் தகவலை வெளியிடுகின்றனர்.
அரசு விட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பஸ்களைப் பயன்படுத்தி அருமையாக ஊருக்குப் போய் பொங்கலைக் கொண்டாடுங்கள் மக்களே...