இயங்காத ஏசி- சரி செய்யாத ஊழியர்கள்- சங்கிலியைப் பிடித்து இழுத்த ரயில் பயணிகள்
சென்னை : சென்னையில் இருந்து புறப்பட்ட கோவை எக்ஸ்பிரசில் ஏசி பழுதானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 2 ஆவது பிளாட்பாரத்தில், நேற்று காலை கோவை எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்தது.அப்போது, சி6 ஏசி பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை. இதுகுறித்து பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் பழுதடைந்த ஏசியை சரி செய்ய ரயில்வே ஊழியர்கள் வரவில்லை. இந்நிலையில், ரயில் புறப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கிளம்பிய ரயில் மீண்டும் பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்து பழுதான ஏசியை சரிசெய்ய முயன்றனர். ஆனால், சரியாகவில்லை.
இதனால், அந்த சி6 பெட்டியில் இருந்த பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின் ரயில் 1.15 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால், சென்னையிலிருந்து அடுத்தடுத்து புறப்பட வேண்டிய பெங்களூர் எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
அடிக்கடி இதுபோன்று ரயில் பெட்டிகளில் ஏசி வேலை செய்யாமல் பழுதடைவதாக பயணிகள் தெரிவித்தனர். சாதாரண பெட்டிகளை அதிக கட்டணத்திற்காக ஏசி கோச்சாக மாற்றி அதை சரியாக பராமரிக்காததால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதாக கூறப்படுகிறது.