பரிவாரங்களுடன் "சஸ்பென்ட்" பழனிமாணிக்கம் கருணாநிதியுடன் சந்திப்பு!!
சென்னை: தி.மு.க.வில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பழனிமாணிக்கம் தமது ஆதரவாளர்களுடன் இன்று அக்கட்சித் தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவை சீரமைக்க குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் திமுக தலைமைக்கு 150 பக்க பரிந்துரை கொடுத்தது.
இதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ராஜ்யசபா எம்.பி. கே.பி.ராமலிங்கம், தருமபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் முல்லைவேந்தன் உள்பட 33 பொறுப்பாளர்கள் தி.மு.க.வில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
அத்துடன் ஒரு வார காலத்துக்குள் நீக்கப்பட்டோர் விளக்கம் அளிக்கவில்லை எனில் கட்சியை விட்டே டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்றும் திமுக தலைமை எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் தி.மு.க.வில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டோரில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இன்று தஞ்சாவூர் மாவட்ட திமுகவினருடன் சென்னை வந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியை பழனி மாணிக்கமும் அவரது ஆதரவாளர்களும் இன்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.