பணம் இல்லை என்றதால் ஆத்திரம்: தூத்துக்குடியில் வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வங்கி திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் பணம் இல்லை என்றதால் பொதுமக்கள் ஆத்திரத்தில் வங்கியை முற்றுகையிட்டனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துவிட்டதால் பொதுமக்கள் அவற்றை வங்கியில் மாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 1ம் தேதி என்பதால் பலர் பென்ஷன் வாங்கவும், அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்கவும் வங்கிக்கு படையெடுத்தனர்.

ஏடிஎம்மில் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அங்கு திரண்டனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள கனரா வங்கியில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் வங்கி பரிவர்த்தனை தொடங்கி சில மணி நேரத்திலேயே பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வரிசையில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களுக்கு பின்னால் நின்ற சிலருக்கு வங்கி ஊழியர்கள் யாருக்கும் தெரியாமல் பணம் கொடுத்ததகாவும், ஆனால் பல மணி நேரம் கால் கடுக்க வரிசையில் நிற்பவர்களுக்கு பணம் இல்லை என்று சொன்னால் எப்படி என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு வங்கி நிர்வாகம் சரிவர பதில் சொல்லவில்லை. இதில் மேலும் கொதிப்படைந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த கயத்தாறு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications