வனப்பகுதிக்குள் அட்டூழியம் செய்யும் சுற்றுலா பயணிகள்.. பிறகு தீ பிடிக்காம என்ன செய்யும்!

மதுரை: வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்பவர்களும், சமூக விரோதிகள் சிலரும் அத்துமீறி முறைகேடாக நடந்து கொள்வதால் தீ விபத்துகளும், வன விலங்களுக்கு ஆபத்தும் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
வனத்தை சுற்றிப்பார்க்கவும், அருவிகளில் நீராடவும் செல்பவர்கள் வனத்தை சீரழித்து விட்டுதான் வருகின்றனர். பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிக்குள் போட்டு விட்டு வருவதோடு வன விலங்குகளின் உயிருக்கும் ஆபத்தான செயல்களை செய்கின்றனர்.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை உலகளவில் பல்லுயிர் பெருக்கத்தில் முக்கியத்துவம் கொண்ட் 25 இடங்களில் ஒன்றாகும். கன்னியாகுமரி, களக்காடு, முண்டந்துறை, கொடைக்கானல், நீலகிரி, ஆனைமலை, முதுமலை, முக்கூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய உயிரின வகைகளைக் கொண்டுள்ளன.

ரம்மியமான வனப்பகுதி
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கேரள மாநிலத்தை ஒட்டி இயற்கை எழிலுடன் அமைந்த மாவட்டம் தேனி. ஆண்டு முழுவதும் ரம்மியமான குளுகுளு சூழல் இங்கு நிலவுகிறது. அருவிகள், அணைகள், பச்சை போர்வை போர்த்திய மலைகள் என பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. குரங்கணி, மேகமலை, கொழுக்குமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வருபவர்கள் இங்கு வந்து மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

கோடையில் கருகிய வனப்பகுதி
தமிழக வனப்பகுதியில் கடந்த 3 மாதகாலமாக மழை பெய்யாததால் அங்குள்ள மரம், செடிகொடிகள் காய்ந்துவிட்டன. இதனால் காற்றுவீசும்போது மரங்கள் உராய்ந்தும் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது என்பதால் சுற்றுலா பயணிகள் பீடி, சிகரெட் துண்டுகள், வன உயிரினங்களை பாதிக்கும் மது பாட்டில்களை வீசி செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் அதை கேட்காமல் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பயணிகள் நடந்து கொள்கின்றனர்.

பாதுகாப்பற்ற பயணம்
வனத்துறையினரின் அனுமதி பெறாமல் மலையேற்றப்பயிற்சிக்கு சென்று தீ விபத்தில் சிக்கி உயிரை விட்டுள்ளனர். பல இளைஞர்கள் உயிரிழந்து விட்டனர். பெண்களும், சிறுமியும் உயிரிழந்துள்ளனர். வனத்துறையினரின் பாதுகாப்பு இன்றி சென்றதே இத்தகைய விபரீதம் நடக்கக் காரணம் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

வனத்துறை அமைச்சர்
தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க வனப்பகுதிகள், அருவிகள், மலைப் பிரதேசங்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களின் இயற்கை எழிலை மேம்படுத்தி பாதுகாக்க ஏதுவாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் கூர் உணர்வு மற்றும் பாரம்பரிய மிக்க பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதய முதல்வர் ஜெயலலிதா கூறினார். அவரது மரணத்திற்குப் பின்னர் இந்த பாதுகாப்பு ஆணையம் செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

நடவடிக்கை தேவை
குற்றாலம், களக்காடு முண்டந்துறை வனப்பகுதிகளுக்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலா பயணிகள் மது அருந்தி விட்டு பாட்டில்களை அப்படியே உடைத்து வனப்பகுதிகளுக்குள் போட்டு விட்டு செல்கின்றனர். அதோடு சிகரெட் பீடி துண்டுகளையும் போட்டு விட்டு செல்கின்றனர். பாபநாசம் அணையில் படகில் சென்று அருவியில் குளிக்கச் செல்பவர்கள் இயற்கை வளத்தை சீரழிக்கின்றனர் என்பதாலேயே படகில் செல்லவும், பாணதீர்த்த அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் அட்டூழியம்
அகஸ்தியர் அருவியில் குளிக்க வரும் பயணிகள் பலரும் மது அருந்து விட்டு வனவிலங்குகளை பாதிக்கும் வகையில் பாட்டில்களை உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர். இன்றும் பலரோ வனப்பகுதிக்குள் சுற்றுலா செல்கிறேன் என்று கூறி விட்டு அங்கேபோய் அசைவம் சமைத்து சாப்பிடுகின்றனர்.

கண்டிப்பு காட்ட வேண்டும்
குற்றால நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளினால் வனப்பகுதிகளும், அருவிப்பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன. வன வளத்தை பாதுகாக்க அங்குள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாகும். குற்றாலம் வனப்பகுதிகளில் இது போன்றதொரு தீ விபத்து ஏற்பட்டு உயிர்பலிகள் நடக்கும் முன்பாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாகும்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!