மக்கள் விரும்பும் மாற்றத்தை மக்கள் நலக் கூட்டணி தரும்!- நல்லக்கண்ணு
மதுரை: வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை மக்கள் நலக் கூட்டணி தரும் என்று மூத்த தலைவர் இரா நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு மதுரை ஒத்தக்கடை 4 வழிச்சாலை அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு, மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் வரவேற்றுப் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மாநாட்டை தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.
அவர் கூறுகையில், "நாம் பல தேர்தல்களைச் சந்தித்து விட்டோம். தேர்தலுக்குப் பின்பு ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை மறந்து விடக்கூடிய நிலைதான் உள்ளது.
தமிழகத்தில் வருகிற தேர்தலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் நினைத்து விட்டார்கள். அதற்கான எதிர்பார்ப்பும் விருப்பமும் மக்களிடம் அதிகம் உள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடிய கடமை மக்கள் நலக் கூட்டணிக்கு உள்ளது. நிச்சயம் இந்தக் கூட்டணி அதைச் செய்யும்.
ஒத்தக்கடையில் உள்ள பாரம்பரிய சின்னமான யானைமலையை உடைத்து சின்னபின்னமாக்க திட்டமிட்ட போது அதை மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் தான் தடுத்து நிறுத்தின.
மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த கூட்டணி செயல்படும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை," என்றார்.