எங்கள் குடும்பத்தையே அவமதித்து விட்டனர் போலீஸார்... ராம்குமார் தங்கை கண்ணீர் பேட்டி
சென்னை: எனது அண்ணன் ராம்குமார் நிரபராதி. அவர் கொலை செய்யவில்லை. எந்த தவறும் செய்யவில்லை. போலீஸார் விசாரணை என்ற பெயரில் எங்களது குடும்பத்தை அவமதித்து விட்டனர். நியாயம் கிடைக்கும் வரை போராடப் போகிறோம் என்று ராம்குமாரின் தங்கை கூறியுள்ளார்.
சுவாதி படுகொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது தந்தை பரமசிவன், தாயார், இரு தங்கைகளையும் போலீஸார் ரகசிய இடத்திற்குக் கொண்டு போய் தீவிரமாக விசாரித்தனர். இது பெரும் சர்ச்சைகளையும் கிளப்பியது.
ராம்குமார் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பம் சென்னைக்கு வந்திருந்தது. தற்போது அவர்களில் தாயாரும், ஒரு தங்கையும் ஊர் திரும்பி விட்டனர். தந்தை பரமசிவனும், இன்னொரு தங்கையும் தொடர்ந்து சென்னையில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் ராம்குமாரின் மூத்த தங்கை அளித்துள்ள ஒரு பேட்டியில் ராம்குமார் நிரபராதி, போலீஸார் வேண்டும் என்றே அவரை வழக்கில் சிக்க வைத்துள்ளதாக குமுறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
சம்பந்தமே இல்லை
எனது அண்ணனுக்கும் சுவாதி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை வேண்டும் என்றே சிக்க வைத்துள்ளனர். அவர் நிரபராதி. குற்றம் எதையும் செய்யவில்லை.
போட்டோவை வெளியிட்டது ஏன்
அவரைக் கைது செய்ததுமே போட்டோவை வெளியிட்டு விட்டனர். குற்றவாளி என்றும் போலீஸார் கூறி விட்டனர். எங்களையும் விசாரணை என்ற பெயரில் பெண் என்று கூட பாராமல் அவமானப்படுத்தினர்.
எங்கள் படத்தை வெளியிட்டது போலீஸ்தான்
எனது அண்ணன் படத்தை மட்டுமல்லாமல் விசாரணைக்கு சென்ற எங்களது படத்தையும் போலீஸார் தான் வெளியிட்டு அவமானப்படுத்தி விட்டனர். இது அநீதியானது.
எப்போதும் படித்தபடி இருப்பார்
எனது அண்ணன் எப்போதும் படித்தபடி இருப்பார். இப்போது அவரை பொய் வழக்கில் சிக்க வைத்து வாழ்க்கையையே வீணடித்து விட்டனர். அவர் இதிலிருந்து மீண்டு வருவார் என்று கூறியுள்ளார் அந்தத் தங்கை.