என்னாது யுவராஜை பிடிக்க 16 செக்போஸ்ட் போட்டும் கோட்டை விட்டுட்டாங்களாமே?
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி யுவராஜ் சரணடைவதற்கு முன்பாகவே கைது செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமக்கல் நகரப் பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் 16 சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் மாறுவேடத்தில் வந்து சரணடைந்து விட்டார். இதன்மூலம் 107 நாள் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் யுவராஜின் ஆதரவாளர்கள் குவிந்தது எப்படி? அவர்களை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது ஏன் என்றும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். காதல் விவகாரத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி பள்ளி பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவர் ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பள்ளிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், கோகுல்ராஜ் உடலை சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை அதிகாரியாக திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா நியமிக்கப்பட்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு
கோகுல்ராஜ் கொலை தொடர்பாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். யுவராஜ் தலைமறைவானார்.
விஷ்ணுபிரியா தற்கொலை
இந்நிலையில் டிஎஸ்பி விஷ்ணு பிரியா கடந்த செப்டம்பர் 18ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிஎஸ்பி தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகியவற்றை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.
வாட்ஸ் அப் யுவராஜ்
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடிதான் காரணம். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோகுல்ராஜ் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என தலைமறைவு குற்றவாளி யுவராஜ், வாட்ஸ்அப் மூலம் ஆடியோ வெளியிட்டதோடு, தனியார் தொலைக்காட்சிகளுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார்.
சரணடைய முடிவு
கோகுல்ராஜ் கொலை மற்றும் டிஎஸ்பி தற்கொலை தொடர்பாக 4 முறை வாட்ஸ்அப் மூலம் ஆடியோ வெளியிட்டு யுவராஜ் பரபரப்பு ஏற்படுத்தி வந்தார். போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்த யுவராஜ், திடீரென நாமக்கல் சேலம் சாலையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அக்டோபர் 11ம் தேதி காலை 10.30 மணிக்கு சரணடையப் போவதாக அறிவித்தார்.
இரண்டு வழக்குகள்
யுவராஜ் மீது கோகுல்ராஜ் கொலை வழக்கு மட்டுமல்ல ஏற்கனவே பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பெருந்துறை காவல் நிலையத்தில் பணம் கேட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இவர் மீது 2013ஆம் ஆண்டு இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
வன்கொடுமை தடுப்புச் சட்டம்
சங்ககிரி,கரூர் காவல் நிலையங்களில் கொலை முயற்சியுடன் அடித்ததாக மூன்று வழக்குகள் போடப்பட்டுள்ளன. திருச்செங்கோடு காவல் நிலையத்தில் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.
வரவேற்க கூடிய கூட்டம்
ஈரோடு காவல்நிலையத்தில் மிரட்டல் வழக்கு ஒன்றும், குமாரபாளையத்தில் கிரிமனல் வழக்கு ஒன்றும் பதியப்பட்டுள்ளது.இத்தனை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தபோதும் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்த யுவராஜை வரவேற்க பெரும்திரளான கூட்டம் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகம் முன்பு கூடியது.
16 செக் போஸ்ட்கள்
நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று காலை முதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல நாமக்கல் நகரப் பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் 16 சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தில் பரபரப்பு
சிபிசிஐடி அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி ஸ்டாலின் உள்பட போலீஸ் அதிகாரிகள் காலை 10 மணி வரை இருந்தனர். பின்னர் அவர்கள் வெளியே சென்றனர். இன்ஸ்பெக்டர் பிருந்தா உள்ளிட்ட சிலர் மட்டும் இருந்தனர். அலுவலகத்திற்கு வெளியே பொதுமக்கள், யுவராஜ் ஆதரவு அமைப்பினர் உள்பட ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
மாறு வேடத்தில் யுவராஜ்
சரணடைய வந்த யுவராஜ், ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அலு வலகம் வந்த பின்னர் தொப்பி, கருப்புக் கண்ணாடி மற்றும் கருப்பு நிற டீ-சர்ட், லுங்கி அணிந்தபடி வந்தார். அவர் வந்தவுடன், அவரை அடையாளம் கண்ட ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபடி அவரை தூக்கினர். அதன்பின்னர் தொப்பி உள்ளிட்டவற்றை அவர் கழற்றி வீசினார். மேலும், வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்தபடி சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.
சாதி ஆதரவு
"கடந்த 100 நாட்களுக்கும் மேலாக யுவராஜின் முகத்தைக்கூட பார்க்காத பல இளைஞர்கள், அவரை கதாநாயகனாகப் பார்த்த்தோடு, சமூக வலைத்தளங்களில் 'ஐ சப்போர்ட் யுவராஜ்' என்று வெளிப்படையாகவே ஹேஷ் டாக் போட்டு எழுதினார்கள். இறுதியாக எதை நினைத்து கோகுல்ராஜ் படுகொலை நடந்ததோ அது நிறைவேறிவிட்டது.
யுவராஜின் லட்சியம்
கொங்கு சாதி அரசியலை முன்னெடுத்த தனியரசு, நாகராஜ், ஈஸ்வரன் ஆகியோரை மிஞ்ச வேண்டும், தன்னுடைய சமூகத்தைக் காப்பாற்ற வந்த நாயகனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற இலக்கு, லட்சியத்தை யுவராஜ் அடைந்துவிட்டார். என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
திசைதிருப்பிய ஆதரவாளர்கள்
சரணடையப்போவதாக யுவராஜ் அறிவித்ததையடுத்து காலை 8 மணிக்கே சிபிசிஐடி அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். முன்னதாக அவர் இருக்கும் இடம் குறித்தும் விசாரித்து கைது செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. காலை 10 மணிக்கு திடீரென அதிகாரிகள் கிளம்பி வெளியில் சென்றனர்.
காத்திருந்த யுவராஜ்
யுவராஜ் சரணடைவதற்கு முன்பாக கைது செய்யும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை யுவராஜ் ஆதரவாளர்கள் திசை திருப்பி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. யுவராஜ் சரணடைவதற்கு உயரதிகாரிகள் ஒப்பு கொண்டாலும் உயரதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தார் என்பதை மறைப்பதற்காகவே வெளியில் சென்றனர் எனவும் கூறப்படுகிறது. சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் காலை 9 மணிக்கே யுவராஜ் வந்து காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆதரவாளர்களுக்கு தெரிந்த விசயம் அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது எப்படி என்பதுதான் பலரின் கேள்வியாகும்.
12 மணிநேரம் விசாரணை
யுவராஜிடம் சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதி தலைமையிலான உயர் போலீஸ் அதிகாரிகள் பகல் 12 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக விசாரணை நடத்தினர். விசாரணையின் போது 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு யுவராஜை போலீசார் திணறடித்தனர். இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு யுவராஜ் பதில் அளிக்கவில்லை.
சிறையில் அடைப்பு
இதனையடுத்து இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நேற்றிரவு நாமக்கல் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலர்மதி அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து யுவராஜ் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.