தமிழகத்தில் இன்றே ஓட்டு போடும் போலீசார், தேர்தல் பணியாளர்கள்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தபால் மூலமாக வாக்குப்பதிவு செய்யும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும், தங்களது வாக்குகளை, தங்களுக்கான வாக்குச்சாவடியில் நாளை அளிக்க முடியாது.
அதனால், அவர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் தேர்தல் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் தங்களது வாக்குகளை தபால் மூலம் அளித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகளில் 3,272 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 2,063 போலீசார் உள்பட 5,822 பேர் பணிபுரிய உள்ளனர்.
வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் தலைமை தபால் நிலையங்களில் தங்களுக்கான தபால் ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
மே 16 வரை ஓட்டு போடலாம்
இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகள் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி காலை 8 மணிவரை பெறப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று காலை 8 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அதற்கு முன்பு வரை தபால் ஓட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடியிலும் ஓட்டு
அதே நேரத்தில் 2 தொகுதிகளிலும் அவரவர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 868 அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையே தொடங்கியது
ஈரோடு லோக்சபா தொகுதியில் சனிக்கிழமையன்றே போலீசார் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவினை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் ஆகியோர் பார்வையிட்டனர். இதேபோல வெளியூருக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற போலீசாரும் சனிக்கிழமையன்றே தபால் ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.