சேலம் டாக்டர் கஸ்டடியில் இருக்கிறாரா தாதா 'பினு'... மஃப்டியில் சுற்றும் தனிப்படை!
சென்னையில் பிறந்தநாள் கொண்டாடி 75 ரவுடிகளை போலீசில் சிக்கவிட்டு தப்பியோடிய விழாநாயகன் தாதா பினு சேலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

சேலம்: சென்னையில் மிக பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாதா பினு சேலத்தில் மருத்துவர் ஒருவரின் கஸ்டடியில் இருப்பதாக கூறப்படுகிறது. கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் பினு அந்த மருத்துவரின் உதவியின்றி கேரளாவிற்குக் கூட தப்பி இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிப்பதால் சேலம் பகுதியில் தனிப்படை போலீசார் மஃப்டியில் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கி இருக்கிறது சென்னை பூந்தமல்லி அருகே தாதா பினுவிற்காக ரவுடிகள் சேர்ந்து கொண்டாடிய பர்த்டே பார்ட்டி. பி பிரிவு ரவுடிகளின் தலைவனாக இருந்த பினுவிற்கு போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், கூலிப்படைத் தலைவன், விஐபிகளுடன் நெருக்கமானவர் என பல அடையாளங்கள் உள்ளன.
குண்டர் சட்டம், 3 கொலை வழக்குகள் என்று வழக்குகளுக்கும் பஞ்சம் இல்லை. ரவுடிகளின் சாம்ராஜ்யத்தில் கொடிகட்டிப் பறந்த பினுவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சிகிச்சைக்காக கேரளா மற்றும் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக பினு அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.

எதற்காக பிறந்தநாள் கொண்டாட்டம்?
பினுவின் இடம்காலியானதால் அந்த இடத்திற்கு ரவுடி ராதாகிருஷ்ணன் வளர்ந்துள்ளான். இதனால் சகித்துக் கொள்ள முடியாத பினு உடல்நலன் தேறி வந்ததும் தனது ரவுடி பட்டாளத்தை குஷிபடுத்தும் விதமாக பர்த்டே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்ததோடு, அந்த பார்ட்டியில் வைத்தே ராதாகிருஷ்ணனை தீர்த்து கட்டவும் திட்டம் போட்டுள்ளார்.

ரவுடிகளை ரவுண்டு கட்டிய போலீஸ்
ஆனால் ரவுடிகள் ஒரே இடத்தில் கூடும் தகவல் பல்லுமதன் என்ற ரவுடி மூலம் தெரியவர, இரவில் போலீஸ் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து கோழியை அமுக்குவது போல அமுக்கிப்போட்டு விட்டனர். ஆனால் இதில் இருந்து எப்படியோ பினு மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளியான கனகு உள்ளிட்டோர் தப்பியோடிவிட்டனர்.

பினு எங்கே?
தப்பியோடியவர்களை பிடிக்க 4 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பினுவிற்கு கல்லீரல் பாதிப்பு நோய் இருப்பதால் அவர் மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சேலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தான் பினு சிகிச்சை பெற்றதாக தெரிகிறது.

சேலத்தில் பதுங்கி இருக்கிறாரா பினு?
எனவே நேற்று அதிகாலை சென்னையில் இருந்து தப்பிய பினு அதிகபட்சமாக சேலம் மருத்துவரின் கண்காணிப்பில் தான் இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பினு தன்னுடைய சொந்த மாநிலமான கேரளாவிற்கு செல்வதாக இருந்தாலும் இவருடைய உதவியுடனே சென்றிருக்க முடியும் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

சேலத்தில் மஃப்டியில் வலம்வரும் போலீஸ்
இதனால் பினுவை தேடுவதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசில் ஒரு பிரிவினர் சேலம் வட்டாரத்தில் நோட்டமிட்டு வருவதாக தெரிகிறது. பினுவின் ஆட்கள் தங்களை அடையாளம் கண்டுவிடாமல் இருப்பதற்காக இவர்கள் மஃப்டியில் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications