சென்னை: போலீஸ் வேன் மோதி 2 சிறார்கள் பலி.. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டிரைவருக்கு உடனடி ஜாமீன்!
சென்னை: சென்னையில் போலீ்ஸ் வேன் மோதி 2 சிறார்கள் பலியான விவகாரத்தில் திடீர் திருப்பமாக விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் 100 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் வாகன டிரைவர் ஏழுமலை உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (16). இவரது நண்பர் சாலமன் (17). சாலமன், ஏகாங்கிபுரம் 2-வது தெருவில் வசிக்கிறார். இருவரும் 10ம் வகுப்பை முடித்து விட்டு பிளஸ் ஒன் படிப்பில் சேரவிருந்தனர். இந்த நிலையில், அயனாவரம் ரயில்வே மைதானம் அருகே நடந்த கால்பந்து போட்டியை வேடிக்கை பார்ப்பதற்காக இருவரும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.
மாந்தோப்பு ரயில்வே மைதானம் அருகில் அவர்கள் சென்றபோது அந்த வழியாக வந்த போலீஸ் வேன் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். சாலமன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று இரவு சாலமனும் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வேனை ஏழுமலை என்பவர் ஓட்டி வந்தார். வேனில் போலீஸாரும் இருந்தனர். ஏழுமலை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குப் பின்னர் அனைவரும் தப்பி விட்டனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அயனாவரம் கான்ஸ்டயார் ரோடு பகுதியைச் சேர்ந்த 75 பேர் அங்கு திரண்டு வந்து போலீஸ் வேனை அடித்து உடைத்து மறியலில் ஈடுபட்டனர். ஏகாங்கிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றொரு பிரிவாக திரண்டு வந்து போராட்டத்தில் குதித்தனர். 2 அரசுப் பேருந்துகளையும் அடித்துத் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் தடியடி நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இமாகுலேட் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ஏழுமலையை கைது செய்தார். அவர் மீது 279 (விபத்து ஏற்படுத்துதல்), 338 (கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 304ஏ (விபத்தின் போது மரணம் ஏற்படுத்துதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைதான டிரைவர் ஏழுமலையை போலீசார் நேற்று இரவு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவரை இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு கூறினார். இதையடுத்து இன்று காலை டிரைவர் ஏழுமலை மூர்மார்க்கெட் அருகில் உள்ள அல்லிகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அவர் மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததால் மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
பலியான இரு மாணவர்களின் உடல்களும் இன்னும் அடக்கம் கூட செய்யப்படவில்லை. அதற்குள் அவர்களின் மரணத்திற்குக் காரணமான டிரைவர் ஜாமீனில் விடுதலையாகிருப்பது மாணவர்களின் குடும்பத்தாரையும், உறவினர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.