ஜன.17ல் முதல்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்! தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு பலன்
சென்னை: குழந்தைகளுக்கு, 'போலியோ' நோய் தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கும் முதற்கட்ட முகாம், இம்மாதம், 17ல் நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு இருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் ஒரே தினங்களில் நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டுக்கான முதல்கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், இம்மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடந்தது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
போலியோ சொட்டு மருந்து ஊற்றும் பணிக்காக, மாநிலம் முழுவதும், 43,054 மையங்கள், 1,652 நடமாடும் முகாம்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியில், 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள். முகாம், காலை 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.