தேர்தல் திருவிழா... மேடைகளில் முழங்கும் தலைவர்கள்... கோவில் கோவிலாக ஓடும் தலைவிகள்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பிரச்சார நடவடிக்கைகளைப் போலவே கோயில்களில் வேண்டுதல், சிறப்பு பூஜைகள் போன்றவையும் களை கட்டத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனுத்தாக்கல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க கட்சித் தலைவர்களின் குடும்பத்தார் தேர்தல் வெற்றிக்காக கோயில் கோயிலாக ஆன்மிகச் சுற்றுலா தொடங்கியிருப்பதையும் காண முடிகிறது.
பேயையும் பார்... நோயையும் பார்...
பேயையும் பார், நோயையும் பார் எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதனைக் கருத்தில் கொண்டோ என்னவோ, நாத்திக கட்சிகளாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கட்சித் தலைவரின் குடும்பத்தாரும் கூட தேர்தல் வெற்றிக்காக கோயில் கோயிலாக ஏறி இறங்கத் தொடங்கியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்...
சமீபத்தில் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான கும்பாபிஷேகத்தின் போது அங்கு முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கியத் தோழி சசிகலாவைக் காண முடிந்தது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அந்த பூஜையில் அவர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மன்னர்கள் கால நடைமுறை...
போரில் வெற்றி பெறுவதற்காக கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தி திருமாங்கல்யத்துடன் கூடிய பிரசாதங்களை பெண்களுக்கு வழங்குவது மன்னர்கள் கால நடைமுறை. அதனைப் பின்பற்றி சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என ஆண்டாள் கோவிலில் சசிகலா சிறப்பு பூஜை நடத்தினார்.
9 வகை பிரசாதம்...
அப்போது அவர் 25 ஆயிரம் பெண் பக்தர்களுக்கு ஜாக்கெட் துணி, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் உட்பட ஒன்பது வகையான பிரசாதங்களுடன் கூடிய பைகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் கோவிலில்...
இதற்குப் போட்டியாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்டாலின் மனைவி துர்கா தை மாத பௌர்ணமி நள்ளிரவில் விசேஷ பூஜை நடத்தியதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரும் சோழ மன்னர்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்றி இந்தப் பூஜையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
கரிகால் சோழன் வழிபாட்டு முறை...
அதாவது சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால் சோழன் போருக்கு செல்லும் முன் காமாட்சி அம்மனை வழிபட்டு 'நவ ஆவர்ண' பூஜை செய்வது வழக்கமாம். அந்தவகையில் சட்டசபைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என துர்கா இந்த சிறப்பு பூஜையைச் செய்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்காக...
மேலும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோவிலில் பெருமாள் சிலையும் உள்ளது. எனவே, வைணவம், சைவம் என்ற இரண்டு சமயத்தினரும் வழிபடும் பெருமை பெற்ற இக்கோவிலில் தேர்தல் வெற்றிக்கான பூஜையில் துர்கா நடத்தியுள்ளார்.
நள்ளிரவு பூஜை...
நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு துவங்கிய பூஜை நள்ளிரவு வரை நீடித்ததாக கோவில் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பூஜையில் துர்காவுடன், அவரது தாயார், தங்கை ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சவுமியா அன்புமணி...
இதேபோல், திமுக, அதிமுக-வைப் போலவே முதலமைச்சர் வேட்பாளரோடு சட்டசபைத் தேர்தலை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி செயல்பட்டு வருகிறது பாமக. எனவே, சசிகலா, துர்காவிற்குப் போட்டியாக அன்புமணி ராமதாஸின் மனைவியான சவுமியா தர்மபுரி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். அப்போது அவர் தனது கணவர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என வேண்டுதல் செய்ததாகத் தெரிகிறது.
கட்சித் தொண்டர்களும்...
கட்சித் தலைவர்களின் குடும்பத்தார் மட்டுமின்றி, அமைச்சர்களும், தொண்டர்களும் தங்களது கட்சி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலோடு கோவில்களில் சிறப்பு பூஜைகளைத் தொடங்கியுள்ளன.
மீண்டும் அமைச்சர்...
தைப்பூசமான நேற்று தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5:45 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்டசெயலர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் தான் அமைச்சராக வேண்டும் என வேண்டுவதற்காக இந்தப் பூஜையில் பழனியப்பன் பங்கேற்றதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு பூஜை...
பழனியப்பனை தொடர்ந்து அதே கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணியின் மனைவி சவுமியா பங்கேற்று தன் கணவர் முதல்வராக வேண்டி வழிபாடு நடத்தினார்.
ஆன்மீக சுற்றுலா...
இப்படியாக திமுக, அதிமுக மற்றும் பாமக கட்சிகளின் முதல்வர் வேட்பாளரின் குடும்பத்தினர் மற்றும் கட்சித் தொண்டர்கள் தேர்தல் வெற்றி வேண்டுதலோடு போட்டிப் போட்டுக் கொண்டு கோவில் கோவிலாக சென்று வருகின்றனர். தேர்தல் முடியும் வரை இந்த ஆன்மீகச் சுற்றுலா தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதுகளை எட்டுமா...?
தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி ஒரு புறம் வாக்காளர்களின் காதுகளை கட்சிகள் வாடகைக்கு எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கடவுள்களின் காதுகளில் முதல்வர் கனவு வேண்டுதல்களை ஓதி வருகின்றனர் அவர்களது குடும்பத்தார்.