டீசல் இல்லை... பாதியில் நின்ற பொங்கல் சிறப்பு பஸ்
கடையநல்லூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு இயக்கிய சிறப்பு பஸ் கடைய நல்லூர் அருகே டீசல் காலியானதால் பாதியில் நிறுத்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பனிமணையில் இருந்தும் கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து சிறப்பு பஸ் ஒன்று கோவை புறப்பட்டுச் சென்றது. பின்னர், அங்கிருந்து மீண்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டு தென்காசிக்கு அந்தப் பேருந்து திரும்பி வந்து கொண்டிருந்தது. நேற்று காலை கடையநல்லூர் அருகே பேருந்து வந்த போது திடீரென டீசல் காலியானதால், பஸ் நின்று விட்டது. இதனால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பரிதவித்தனர். வேறு வழியில்லாமல், பயணிகள் அந்த வழியாக வந்த மற்ற பேருந்துகளில் தென்காசிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.