மண்டையைப் பிளக்க ஆரம்பித்தது வெயில்... கூடவே மின்வெட்டும் 'ரண்டக்க ரண்டக்க'!
நெல்லை: தமிழகத்தில் மெல்ல மெல்ல வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. அதிகாலையிலும், இரவிலும் பனி வெளுத்து வாங்கினாலும் பகல் முழுவதும் செம வெயிலாக இருக்கிறது. இதையடுத்து கூடவே மின்வெட்டு பீதியும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.
இதுவரை மினி வெட்டாக இருந்து வந்த மின்வெட்டு மீண்டும் முழு வீச்சில் தொடங்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போய் உள்ளனர்.
மீண்டும் பல மணி நேரம் மின்வெட்டு இப்போதே வந்து விடுமோ என்றும் மக்கள் பயப்படுகின்றனர். காரணம், மின் உற்பத்தியும் கவலைக்கிடமாகி வருவதால்.
வாடை வாட்டுது...
மழைக்காலம் முடிந்து போய் விட்டது. இரவிலும், அதிகாலையிலும் பனி கொட்டுகிறது. கடும் குளிர் ஆட்டிப் படைக்கிறது. வாடைக்காற்று நடுநடுங்க வைக்கிறது.
சூரியனைப் பார்த்தும் பயப்படாத பனி
காலையில் 6 மணிக்கு மேலும் பனி மூட்டமாக உள்ளது. சாலைகளில் வாகனங்களில் செல்வோர் இந்த பனி மூட்டத்தால் சற்றே சிரமப்பட நேரிடுகிறது. இத்தனைக்கும் சூரியன் வந்தும் கூட மெல்ல மெல்லத்தான் விலகுகிறது இந்த பனி மூட்டம்.
அதிகரிக்கும் வெயில்
ஆனால் பகலில் அப்படியே நிலைமை உல்டாவாகி விடுகிறது. நல்ல வெயில் கொளுத்துகிறது. உடம்பு சுடும் அளவுக்கு வெயில் அடிக்கிறது. வெயில் காலத்தின் தொடக்க உரையாக இதை மக்கள் பார்க்கின்றனர்.
மீண்டும் மின்வெட்டு
வெயில் காலம் மெதுவாக வர ஆரம்பித்திருப்பதால் கூடவே மின்வெட்டு பீதியும் வந்து விட்டது. தமிழகத்தில் மின்வெட்டு நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்து வருகிறது. புதிய மின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாததாலும் உற்பத்தியை விட மின் நுகர்வின் அளவு உயர்ந்துள்ளதால் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது.
காற்று அடித்தால்தான் ஆச்சு
காற்று வீசும் காலங்களில் காற்றாலைகள் முலம் ஓரளவு இந்த பிரச்சனைகள் இருக்காது. கடந்த 1 மாத காலமாக குளிர் நிலவியதால் மின் தேவை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
மின் நுகர்வு அதிகரிப்பு
ஆனால் தற்போது மின் நுகர்வு அளவு அதிகரித்துள்ளதால் மீண்டும் மின்வெட்டு தலைதூக்க தொடங்கியுள்ளது. தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ளதால் வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நெல்லையில் காலை முதலே தொல்லை
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மின்வெட்டு தொடங்கியது. காலை 6 மணிக்கு போன மின்சாரம் காலை 10 மணி அளவில் தான் வந்தது.
தேவை 12,799 மெகாவாட்
மொத்த மின்தேவை 12,799 மெகவாட் என்ற அளவை எட்டிய நிலையில் உற்பத்தியோ 9779 மெகாவாட்டாகவும், அதிகபட்ச மின்உற்பத்தி 11,428 மெகவாட் என்ற நிலையிலும் இருந்தது.
2 மாதமே இருக்கிறது...
கோடை காலம் தொடங்க இன்னும் 2 மாதம் இருக்கும் நிலையில் அதற்கு முன்னரே மின்வெட்டு தலைதூக்க தொடங்கி விட்டதால் வரும் மாதங்களில் மின்வெட்டு எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.