பணி மாறும் மனநிலையில் பிரவீன் குமார்-2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய தலைமை தேர்தல் அதிகாரி?
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விலகி, வேறு பணிக்கு செல்லும் மனநிலையில் பிரவீன்குமார் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல்வாதிகளின் விமர்சனங்கள், வழக்கு மிரட்டல் போன்ற காரணங்களால்தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்கட்சிகளின் விமர்சனம்
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பும் பின்பும் பிரவீன்குமாரை எதிர்க்கட்சிகள் அதிக அளவில் விமர்சித்தன. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டின.
வழக்குத் தொடரும் எதிர்கட்சிகள்
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
மன உளைச்சல்
இதுபோன்ற செயல்கள் பிரவீன்குமாருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தேர்தல் துறையினர் சிலர் தெரிவித்தனர்.
2011ல் தொடங்கிய பணி
கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வரும் பிரவீன்குமார், தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கும் மனநிலையில் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணியில் இருந்து விடுவிக்க
2012-ம் ஆண்டு இறுதியிலேயே தன்னை பதவியில் இருந்து விடுவிக்கும்படி தலைமைத் தேர்தல் ஆணையத்தை பிரவீன்குமார் கேட்டுக் கொண்டார். எனினும், சிறப்பாக பணிபுரிந்து வந்த அவரை விடுவிக்க தேர்தல் ஆணையம் விரும்பவில்லை.
2016க்குள் பணி மாற்றம்
ஆனால், தற்போதும் அதே மனநிலையில் பிரவீன்குமார் இருப்பதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2016 சட்டப்பேரவை தேர்தலுக்குள் மாறுதல் பெற்றுச் சென்றுவிட வேண்டும் என அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.
என் விருப்பம் எதுவுமில்லை
இப்பதவிக்கு நியமிக்கும் முன்பு என்னிடம் விருப்பம் எதுவும் கேட்கவில்லை. 2012-ம் ஆண்டு இறுதியில் இப்பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று நான் விருப்பம் தெரிவித்திருந்தது உண்மைதான். ஆனால், அது தொடர்பாக கடிதம் எதுவும் எழுதவில்லை. அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது தற்போதைய மனநிலை பற்றி எதுவும் கூறமுடியாது என்று கூறியுள்ளார் பிரவீன்குமார்.
நெருக்கடிக்கு ஆளாகும் அதிகாரிகள்
தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருப்பவர்கள், கடும் விமர்சனத்துக்குள்ளாகும் நிலை அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், யாரும் வர விரும்பாத ஒரு பதவியாக இது மாறி வருகிறது.
நரேஷ்குப்தாவிற்கும் நெருக்கடி
முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஓஜா, நரேஷ்குப்தா போன்றோர் 8 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பதவியில் நீடித்தனர். ஆனால், இப்போது அப்படிப்பட்ட மனநிலையில் தேர்தல் அதிகாரிகள் இல்லை என தெரிகிறது.
பணிச்சுமையோடு மனச்சுமை
தேர்தல் துறையினரை விமர்சிக்கும் போக்கு, நாடு முழுவதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் பணிச் சுமையுடன், மனச்சுமையும் அதிகம் உள்ள பதவியாக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியை கருதுகின்றனர்.