காதில் பென்சிலால் குடைவது... லத்தியால் அடிப்பது - ஆசிரியர்களின் கொடூர தண்டனைகள்
பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்த மாணவனை கொடூர தண்டனை கொடுத்து உயிரை எடுத்துள்ளனர் ஆசிரியர்கள். டான்பாஸ்கோ பள்ளியில் மாணவர்களுக்கு கொடூர தண்டனை கொடுக்கப்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை: டான்பாஸ்கோ பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் நரேந்தர் ஆசிரியர் கொடுத்த தண்டனையால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணத்தை கொட்டி கொடுத்து படிக்க வைத்த பள்ளியில் உயிரை எடுத்து விட்டார்களே என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டாகும்.
சென்னை பெரம்பூரில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் நரேந்தர் உடற்கல்வி ஆசிரியர் கொடுத்த கொடுமையான தண்டனையால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தாகத்தில் தவித்த மாணவனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் உயிரை குடித்து விட்டார்களே என்று பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.
பள்ளியில் மாணவர்களை மாட்டை அடிப்பது போல அடிப்பார்கள் என்றும் கைகளில் லத்தியால் அடிப்பார்கள், காதில் பென்சிலை விட்டு குடைவார்கள் என்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் வலியுறுத்தல். இதற்காகவே இரண்டாவது நாளாக இன்று போராடினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில் மாணவர் நரேந்தர் உயிரிழந்தது போன்று இனி எதிர்காலத்தில் நடக்காத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடந்துகொள்ளும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் மனஅழுத்தத்தத்தை குறைக்க கவுன்சிலிங் வழங்கப்படும். மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க உள்ளதால் உடல் திறன் மேம்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.