அடடே.. தமிழக அரசுக்கு எதிராக திருநாவுக்கரசர் ஒரு கருத்து சொல்லிட்டாரே
அனைத்து மதுக்கடைகளையும் மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை விரைவில் அமல்படுத்த வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி: தமிழகத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடி, பூரண மதுவிலக்கை விரைவில் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும்.
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்தித்து வறட்சி நிவாரணமாக ரூ.40 ஆயிரம் கோடியும், வர்தா புயல் நிவாரணமாக ரூ.30 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆந்திரம், கேரளம் ஆகிய அரசுகள் மத்திய அரசின் அனுமதியை மீறி அணைகளைக் கட்டி வருகின்றனர். இந்த விவகாரங்களில் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சி அமைந்தால் நல்லது. தற்போதைய ஆட்சி நீடிக்குமா? என்பது கோர்ட்டு முடிவின்படி தெரியும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஆனால் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றவுடன் ஏற்கெனவே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட 500 கடைகள் இன்னும் மூடப்படாமல் உள்ளன. இந்நிலையில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு பதிலாக அனைத்து மதுக்கடைகளையும் மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசின் நல்ல நடவடிக்கைகளை பாராட்டுவோம். மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சுப்பிரமணிய சுவாமி கூறிய குற்றச்சாட்டுக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications