அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு மாதமாகியும் உதவித் தொகை வழங்கவில்லை: குற்றம்சாட்டும் பொதுமக்கள் !
நெல்லை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த 10ம் வகுப்பு மற்றும் பட்டதாரி பெண்களுக்கு, தமிழக சமூகநலத் துறை சார்பில் ‘திருமண உதவி திட்டம்' என்ற பெயரில் தமிழக அரசு, தாலிக்கு தங்கத்துடன் நிதியுதவி அளித்து வருகிறது.
இத்திட்டத்தின்படி, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்து, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கமும் ரூ. 25 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதேபோல், பட்டதாரி பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கமும் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும் தமிழக சமூகநலத் துறை அமைச்சகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து ஊராட்சி ஓன்றியங்களை சேர்ந்த 720 பயனாளிகளுக்கு கடந்த மாதம் குற்றாலத்தில் வைத்து தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் தங்கம் வழங்கப்பட்டது. அப்போது இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவித் தொகை நேரிடையாக பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் இன்னும் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து கீழப்புலியூரை சேர்ந்த காமாட்சி என்பவர் கூறுகையில், கடந்த மாதம் 7ம் தேதி குற்றாலத்தில் நடந்த தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் காலையிலிருந்து மாலை வரை காத்திருந்து தாலிக்கு தங்கம் மட்டுமே வழங்கினர். கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் ஆகிவி்ட்டது. இன்னும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கவில்லை.கேட்டால் வங்கியிலும் எரிச்சல் படுகின்றனர். இது குறித்து
அரசு அதிகாரிகளிடம் கேட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால் இப்போது கிடைக்காது. தேர்தல் முடிந்த பிறகுதான் கிடைக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் எங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு முன்னரே தங்கம் வழங்கப்பட்டு விட்டது. இதனால் எங்களுக்கு பணத்தை அனுமதிக்க தடை இல்லை. ஆனால் அதிகாரிகள் ஏதோ காரணத்தால் சாக்கு போக்கு சொல்லி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கொதிப்புடன் கூறினர்.