அழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா?
கள்ளழகர் ஏன் வைகை ஆற்றில் ஏன் எழுந்தருளுகிறார் என்பதை புராண கதைகள் மூலம் தெரிந்து கொள்வோம்.
மதுரை: சித்திரை மாதம் மதுரை மாவட்ட மக்களுக்கு தீபாவளி... ஆம் சித்திரை திருவிழாதான் அவர்களுக்கு தீபாவளி, மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் என சைவம், வைணவம் இணைந்து கொண்டாடப்படும் விழாக்களால் மதுரை மாநகரம் களைகட்டும். அது ஏன் அழகர் ஏன் மலையில் இருந்து இறங்கி வந்து வைகை ஆற்றில் இறங்குகிறார் என்பதை புராண கதைகள் மூலம் தெரிந்து கொள்வோம்.
மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. இங்கே சுந்தரராஜ பெருமாளாக எழுந்தருளியுள்ளார் பெருமாள். அழகர் மலையில்
சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார்.
பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர்.
அதன்படி வைகைக் கரையில் தவளையாக தவம் பண்ணிக் கொண்டிருந்த முனிவருக்கு, சாப விமோசனம் கொடுக்கவே கள்ளழகராக மதுரைக்கு வந்து வைகையில் எழுந்தருளியதாக கூறுகின்றன புராணங்கள்.
மீனாட்சி திருக்கல்யாணம்
தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். இதனிடையே, அழகர் வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை.
மாண்டூக முனிவருக்கு சாபம்
வைகையில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் தனது பக்தரான மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.
தேனூர் மண்டபம்
சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார். தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.
தசாவதார காட்சி
தேனூர் மண்டபத்திலிருந்து மீண்டும் மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார்.
பூப்பல்லக்கு
தங்கப்பல்லக்கில் மலையில் இருந்து இறங்கி வந்த அழகர் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்புவார். வழிநெடுக அவருக்கு பக்தர்கள் விடை கொடுத்து அனுப்புவார்கள். அதிகாலையில் அழகர்மலையை சென்றடைவார், தீர்த்தவாரியுடன் சித்திரை திருவிழா நிறைவடையும். இனி அழகரை பார்க்க ஒருவருடம் காத்திருக்க வேண்டுமோ என்ற ஏக்கத்துடனேயே பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.