விதிமுறையை மீறி "போர்வெல்".. ஓபிஎஸ் நிலத்தில் ஆய்வு.. பொதுப் பணித்துறை அதிரடி!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நிலத்தில் விதிமுறைகளை மீறி ஆழ்த்துளைக் கிணறு அமைக்கப்பட்டு நீர் உறிஞ்சப்படுவதாக பொதுமக்கள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பொதுப்பணித் துறையினர் சர்வே மேற்கொண்டனர்.
தேனி: ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய நிலத்தில் வருவாய்த்துறையினர் சர்வே செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான இடம் உள்ளது.
அதில், 200 அடி ஆழத்தில் கிணறு ஒன்று மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 200 எச்பி மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் கிராமத்தில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ்ஸுக்கு எதிராக போராட்டம்
இந்நிலையில், மேலும் 2 கிணறுகள் தோண்டும் பணி கடந்த வாரம் தொடங்கியது. அதனால் கொதித்தெழுந்த கிராம மக்கள் தீவிரப் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து ஒரு கிணறு தோண்டும் பணி மட்டும் நிறுத்தப்பட்டது.
பொதுமக்கள் மனு
இதனைத் தொடர்ந்து தேனி கலெக்டர் வெங்கடாசலத்திடம் லட்சுமிபுரத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் நிலங்கள் மற்றும் கிணறுகளை சர்வே செய்ய வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக உள்ளவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், கிணறுகளை மூட வேண்டும் என்றும் கிராம மக்கள் மனு அளித்தனர்.
கலெக்டர் நடவடிக்கை
இதையடுத்து, கலெக்டர் வெங்கடாசலம் ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான நிலத்தை சர்வே செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கையில் இறங்கினர்.
ஓபிஎஸ் நிலம் சர்வே
பொதுப்பணித்துறை அலுவலர் முருகன், விஏஓ வனிதா ஆகியோர் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் உள்ள நிலங்கள் மற்றும் கிணறுகள் உள்ள இடங்களை சர்வேயர்கள் நேற்று சர்வே செய்தனர். அப்போது கிராமத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். முன்னாள் முதல்வரின் நிலம் சர்வே செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.