செல்பி எடுத்தாங்க... அமைச்சர்கள்னு அறிவிச்சாங்க.. ஆனா மநகூ புட்டுக்கிச்சே மக்கா!
மக்கள் நலக் கூட்டணி உருவாகிய புதிதில் செல்பி எடுத்தும், உருகி உருகி பேசியும், வாக்கிங் போயும் அசத்தினர் அதன் தலைவர்கள். கடைசியில் அது பிளவுபட்டு போய் விட்டது.
சென்னை: ஒன்னுமண்ணுமா இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தலை எதிர் கொண்ட மக்கள் நலக் கூட்டணி உடைந்திருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால் யார் யாருக்கு எந்தத் துறை என்பது வரை ஒதுக்கி வேலை பார்த்த மநகூவிற்கு என்னதான் ஆனது. வைகோவின் தான்தோன்றித்தனமான பேச்சும், செயல்பாடுகளும்தான் இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய நான்கு கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியாக ஒன்றிணைந்து கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. இது வெறும் தேர்தலுக்கான கூட்டணியல்ல என்றும் மக்கள் பிரச்சனையை தொடர்ந்து சமூகத்தின் முன் வைத்து போராடும் இயக்கம் என்று கூறப்பட்டு வந்தது.
அதன் பின்னர், திருமாவளவன், வைகோ, ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகிய நான்கு பேரும் செய்யும் செயல்கள், பேசும் பேச்சுகள் என அனைத்தும் தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பேசு பொருளாக மாறியது. அந்த வகையில், இவர்கள் நான்கு பேரும் எடுத்துக் கொண்ட செல்பி வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவியது.
செல்பி
திருமாவளவன் செல்பி எடுக்க மற்ற தலைவர்கள் புன்னகையுடன் போஸ் கொடுத்த அந்தப் படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், இது ஊழலை ஒழிக்கும் செல்பி, மீத்தேன் திட்டம் தடுக்கும் செல்பி, மதுவிலக்கு அமலாக்கும் செல்பி, தீண்டாமை ஒழிக்கும் செல்பி, கொள்கை அரசியல் முழங்கும் செல்பி என்று வரிசைப் படுத்தி மகிழ்ந்தார் ஜி.ராமகிருஷ்ணன்.
அமைச்சர் பதவி
இது போதாதென்று மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்த தேமுதிக இளைஞர் அணித் தலைவர் சுதிஷ், தனது மாமா விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக் கொண்ட இந்த நால்வருக்கும் அமைச்சர் பதவிகளை வாயிலேயே வழங்கி அசத்தினார். பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தால் வைகோவிற்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்று வாய்ப்பந்தல் போட்டார். மேலும், திருமாவளவனுக்கு கல்வி அமைச்சர் பதவி, ஜி. ராமகிருஷ்ணனுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி, முத்தரசனுக்கு நிதித்துறை அமைச்சர் பதவி என்று பங்குபோட்டுக் கொடுத்தார் சுதிஷ்.
தவிடு பொடியான கனவு
ஆனால், தேர்தலில் இவர்களின் கனவு பலிக்கவில்லை. மக்கள் வேறுவிதமான முடிவுகளையே அளித்தனர். இந்தக் கூட்டணிக்கு ஒரு சீட்டைக் கூட மக்கள் கொடுக்கத் தயாராக இல்லை. இதனைத் தொடர்ந்து தேமுதிக, தமாகா என ஒவ்வொன்றாய் மநகூவில் இருந்து வெளியேறின. இதன் பிறகு தட்டுத்தடுமாறி சென்று கொண்டிருந்தது மநகூ.
இந்நிலையில், மநகூவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வைகோ, மநகூவில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்றும், சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய 3 கட்சிகளுடனான நட்பு தொடரும் என்று இன்று அறிவித்துள்ளார்.
உடைத்த வைகோ
வைகோ அறிவித்த இந்த முடிவிற்கு சிபிஎம், சிபிஐ, விசிக என மூன்று கட்சிகளும் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக வரவேற்கவே செய்துள்ளன. இதனை வைத்துப் பார்த்தால் வைகோ எந்த அளவிற்கு கூட்டணிக்குள் குடைச்சல் கொடுத்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.