வர்றாரு.. வர்றாரு.. ராகுல் வர்றாரு.. 'சித்திரைத் திருவிழா'வுக்கு ரெடியாகும் தமிழக காங்கிரஸ்!
சென்னை: காங்கிரஸ் துணைப்பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், ஆளும் அதிமுகவிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் சத்திய மூர்த்தி பவன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நானும் ரவுடிதான் என்கிற ரீதியில் காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. போராட்டம் ஏதாவது நடத்தினால்தான் மக்களுக்கு நம் நினைவு வரும் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு இப்போது தெரியவந்துள்ளது. எனவே ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டத்தை விரைவில் நடத்த உள்ளனர்.
தனியாக நின்றால் ஒரு இடத்தில் கூட டெபாசிட் கிடைக்காது என்று அவர்களுக்கே தெரியவந்துள்ளது. எனவேதான் திமுக, கூடவே காம்ரேட்டுகளையும் கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர் காங்கிரசார். இதை உறுதிபடுத்தும் விதமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் சமீபத்திய பேச்சுக்கள் இருக்கவே, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனராம்.
கட்சியை பலப்படுத்துங்கப்பா
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையா இருக்கணும்
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடந்த விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உள்பட 30 பேர் பங்கேற்றனர். அப்போது ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பு உண்மையாக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டதாம்.
போராட்டத்திற்கு தயாரா?
தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிராக போராட தயாரா என்று தமிழக தலைவர்களை ராகுல் காந்தி கேட்கவே, நீங்கள் தமிழகம் வாருங்கள் இணைந்து போராடலாம் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அழைப்பு விடுத்தாராம். தமிழக அரசுக்கு எதிராக கவர்னரிடம் பேரணியாக சென்று ஊழல் புகார் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
சிறை நிரப்ப தயார்
அடுத்த கட்டமாக, சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய, மாநில ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று கட்சி மேலிடம் தெரிவித்து இருப்பதால் அந்த கோணத்திலேயே போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று செயற் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோஷ்டி மோதல்
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் இருக்கக் கூடாது. அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ப.சிதம்பரத்துடன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியதாக கூறப்படுகிறது. இருவரும் ராசியாகிவிட்டதாகவும் தொண்டர்கள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனி கோஷ்டி பூசலுக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ராகுல்காந்தி
ராகுல்காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்தால் அது கட்சி வளர்ச்சிக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ராகுல் காந்தியை தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்ய அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அப்போ ராகுல் வரப்போறார்... வலுவான கூட்டணி அமையப்போகிறது என்று உற்சாகத்தில் இருக்கிறார்களாம் காங்கிரஸ் தொண்டர்கள்.